சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற அரசு மற்றும் கட்சி விழாக்களில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து மிக முக்கியமான அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமையும் என்றும், அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ₹1.21 கோடி மதிப்பிலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் தனபால் மற்றும் இன்பதுரை ஆகியோரின் உள்ளூர் பகுதி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ₹80.30 லட்சம் மதிப்பிலும் முடிக்கப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை இபிஎஸ் திறந்து வைத்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் எடப்பாடி நகராட்சியின் 30 வார்டுகளுக்கும் தடையில்லாப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. சாலை வசதிகள், புதிய அங்கன்வாடி கட்டிடங்கள், ரேஷன் கடைகள் என மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன என அவர் பட்டியலிட்டார்.
இதையும் படிங்க: ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம்! எடப்பாடி பழனிசாமி மாஸ் அறிவிப்பு!
எடப்பாடி – சங்ககிரி சாலையில் அரசு அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் வறண்ட நூறு ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டத்தில் விடுபட்டுள்ள மீதமுள்ள ஏரிகளும் உடனடியாக நிரப்பப்படும் என உறுதி அளித்தார்.
குறுகிய காலத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. அந்தத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேஜ (NDA) கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனிப் பெரும்பான்மையுடன் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தொண்டர்களிடையே உற்சாகமாகப் பேசினார்.
அதிமுக தலைமையில் கூட்டணி அமையும் என அமித் ஷா ஹரித்வாரில் பேசிய அதே நாளில், எடப்பாடி பழனிசாமியும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் எடப்பாடியில் பேசியிருப்பது, தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய கூட்டணியின் வரவை உறுதி செய்துள்ளது.
இதையும் படிங்க: விசுவாசத்திற்கு ஓபிஎஸ்..! துரோகத்திற்கு ஈபிஎஸ்..! மதுரையில் எடப்பாடியை வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்!