தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) இன்று மதியம் சென்னை திரும்பினார். நேற்று இரவு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய நிலையில், இன்று அவர் தமிழகம் வந்துள்ளார்.
நேற்று இரவு சுமார் 9:00 மணியளவில் தொடங்கிய இந்தச் சந்திப்பு நீண்ட நேரம் நீடித்தது. இதில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக - பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு, கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் மற்றும் தேர்தல் பிரச்சார வியூகங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த எடப்பாடி பழனிசாமிக்கு, சென்னை விமான நிலையத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி - அமித் ஷாவுடன் இன்று இரவு தொகுதிப் பங்கீடு குறித்த முக்கியப் பேச்சுவார்த்தை!
பிரதமர் மோடி மதுரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அடுத்த நாளே இந்தச் சந்திப்பு நடந்துள்ளதால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வெற்றி வாய்ப்புகள் குறித்து இரு தலைவர்களும் நம்பிக்கைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
டெல்லி பயணத்தின் முடிவுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி விரைவில் தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசித்து, அதிகாரப்பூர்வக் கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமித் ஷாவுடனான சந்திப்பின் போது, மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழலால் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ளத் தமிழர்களை விரைவாக மீட்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எடப்பாடி பழனிசாமி முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மோடி, அமித்ஷாவுக்கு பதில் சொல்லும் ஒரே தத்துவ தலைவர் ஸ்டாலின்! - ஆ.ராசா எம்.பி. ஆவேச உரை!