ஐரோப்பியக் கண்டம் முழுவதும் வரலாறு காணாத வகையில் வீசி வரும் அதீத வெப்ப அலையின் (Extreme Heatwave) காரணமாக இதுவரை 16,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக Times of India அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதீத வெப்பம் மற்றும் வறட்சியால் பல்வேறு நாடுகளில் தீவிர காட்டுத்தீ ஏற்பட்டு நிலைமை மிக மோசமடைந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவிற்குப் பதிவாகி வரும் கடுமையான வெப்பநிலை உயர்வால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது. குறிப்பாக பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி கொளுத்தி வருகிறது. முதியவர்கள், குழந்தைகள் மற்றும் ஆஸ்பத்திரி நோயாளிகள் வெப்பத்தின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். ஐரோப்பிய இறப்பு கண்காணிப்பு அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, வெப்பத் தாக்கத்தால் நிகழ்ந்த கூடுதல் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 16,000-ஐ கடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடும் வெயிலோடு சேர்ந்து நிலவும் வறண்ட வானிலை காரணமாக பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் வனப்பகுதிகளில் மிகக் கடுமையான காட்டுத்தீ பரவி வருகிறது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான காடுகள் தீக்கிரையாகி வரும் நிலையில், தீயணைப்பு வீரர்கள் பல நாட்களாகத் தீயைக் கட்டுப்படுத்தப் போராடி வருகின்றனர். காட்டுத்தீ குடியிருப்புகளை நோக்கிப் பரவியதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டு, பல இடங்களில் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சதுரகிரியை சூழ்ந்த காட்டுத்தீ..!! பக்தர்கள் மலைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை..!!

புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளே ஐரோப்பாவைத் தாக்கி வரும் இந்த வரலாறு காணாத வெப்ப அலைக்குக் காரணம் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். காட்டுத்தீயை அணைக்கவும், பொதுமக்களை வெப்ப அலையிலிருந்து பாதுகாக்கவும் ஐரோப்பிய நாடுகள் அவசரகால நடவடிக்கைகளை முழுவீச்சில் முடுக்கிவிட்டுள்ளன.
இதையும் படிங்க: டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!