விவசாயிகளுக்கு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட வேளாண் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரி, கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், பொதுமக்களுக்கு எவ்விதத் தொந்தரவும் ஏற்படக் கூடாது என்பதற்காக, திருச்சிக்கு வந்து சொந்த பட்டா நிலத்தில் அமைதியாக தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்துவதற்கு 45 விவசாய சங்கங்கள் இணைந்து ஏற்பாடுகளைச் செய்திருந்தன.
ஆனால் காவல்துறையினர் அங்கு பந்தல் அமைக்கக்கூட அனுமதிக்கவில்லை. இதனால் விவசாயிகள் வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாய சங்கங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 12 பேரை காவல்துறையினர் வீட்டு காவலில் வைத்திருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டில் 10 லட்சம் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்களில் இருந்து கடன் வசூல் நெருக்கடி ஏற்பட்டு வருவதாகவும், வசூல் நோட்டீஸ் மற்றும் ஜப்தி நோட்டீஸ்கள் அனுப்பப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டம் எதிரொலி! தமிழக அரசுக்கு அண்ணாமலை வைத்த முக்கிய கோரிக்கை!
“இதுபோன்ற நிலை கடந்த 35 ஆண்டுகளில் எங்காவது நடந்திருக்கிறதா? இந்த ஆட்சி வந்தபோது அமைச்சர்களிடம் சென்று அன்போடும், பணிவோடும் எடுத்துச் சொன்னோம். தயவுசெய்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாதீர்கள். விவசாயிகளுக்கு கடன் வசூல் நெருக்கடி கொடுக்காதீர்கள். விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. உற்பத்திச் செலவுகூட கட்டுப்படியாகவில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளாக விவசாயிகள் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மூன்று போகம் என ஐந்து ஆண்டுகளில் 15 போகம் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். தற்போது 10 மாதங்களாக கடனைச் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி அனைவருக்கும் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும். பிரச்சினையைத் தீர்த்தால் மட்டுமே போராட்டம் இல்லாமல் அமைதியான சூழல் ஏற்படும். இல்லையெனில் தமிழகத்தில் விவசாயத் தற்கொலைகள் அதிகரிக்கும்.
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 10,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாகவும், தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 600 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினையை அரசு சரியாகக் கையாளவில்லை என்றால், இந்த ஆண்டு மட்டும் 5,000 விவசாயிகள் தற்கொலை செய்யும் சூழ்நிலை ஏற்படலாம்” என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதன் காரணமாகவே 45 விவசாய சங்கங்கள் இணைந்து அறவழியில் அமைதியாக, தங்களது சொந்த நிலத்தில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள விவசாய சங்க நிர்வாகிகளை முதலில் விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
“நாங்கள் அமைதியாக அறவழியில் போராடுவோம். எந்த இடத்திலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படக் கூடாது. எங்களுடைய கோரிக்கைக்காக எங்களுடைய நிலத்திலேயே அமைதியாகப் போராடுகிறோம். திட்டமிட்டபடி இந்தப் போராட்டம் அமைதியாக நடைபெறும்” என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விவசாயி கூறுகையில், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட வேளாண் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறோம். தற்போது திருச்சியில் தொடர் காத்திருப்புப் போராட்டமும், உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன.
தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 100 முதல் 150 பேர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மூலம் நேற்று இரவு மற்றும் இன்று காலை புறப்பட்டனர்.
இன்று அதிகாலை சுமார் 3.30 மணி முதல் 4 மணியளவில் நான் போராட்டத்திற்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு பேருந்து நிலையத்திற்குச் சென்றேன். அங்கு காவல்துறையினர் எங்களை கைது செய்து அழைத்துச் சென்று தற்போது வீட்டு காவலில் வைத்துள்ளனர்.
போராட்டத்தைத் தடுக்க வேண்டும் என்பதில் அரசு தீவிரமாக இருப்பது தெரிகிறது. விவசாயிகள் போராடக் கூடாது, விவசாயிகளுக்கான சலுகைகளை வழங்கக் கூடாது என்பதுபோல் அவர்கள் செயல்படுகின்றனர்.
பல கட்டப் போராட்டங்களை நடத்திய பிறகும், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியே நாங்கள் அறவழியில் அமைதியான முறையில் எங்களுடைய சொந்த இடத்தில் போராட்டம் நடத்துகிறோம்.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் எங்களுடைய முக்கிய விவசாய சங்க நிர்வாகிகளை வீட்டு காவலில் வைக்கின்றனர். இது அரசின் மோசமான நடவடிக்கையைக் காட்டுகிறது. யாருமே போராடக்கூடாது என்ற வகையில் போராட்டத்தை நசுக்க முயற்சிக்கின்றனர்.
தமிழக அரசு உடனடியாக கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட வேளாண் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் மீது இதுபோன்ற அடக்குமுறைகளை அரசு கைவிட வேண்டும்.
எங்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, காவல்துறையினர் கைது செய்து வீட்டு காவலில் வைத்துள்ளனர். இதை தமிழக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
எங்களை கைது செய்து வைத்திருப்பதால் இந்தப் போராட்டம் நிற்கப் போவதில்லை. கண்டிப்பாக போராட்டம் தொடரும். விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை கைது செய்து வைத்திருப்பதால் போராட்டம் நிற்காது.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலைய இடத்தில் சிப்காட்? விவசாய நிலங்களுக்கு இனி என்ன ஆகும்? எழும் கேள்விகள்!!