நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வணிக எல்பிஜி (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, HCL டெக்னாலஜிஸ் (HCLTech) நிறுவனம் தனது சென்னை அலுவலக ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்றும் (Work From Home) வசதியை அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக, இந்தியாவில் வணிக உபயோகத்துக்கான 19 கிலோ எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல மாநகரங்களில் உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் நிறுவன கேன்டீன்கள் செயல்பட முடியாமல் திணறி வருகின்றன. பல இடங்களில் உணவு வகைகளை குறைத்து வழங்குவது, செயல்பாட்டு நேரத்தை குறைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சில உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், HCL டெக் நிறுவனத்தின் சென்னை அலுவலகங்களில் இயங்கி வந்த கேன்டீன்கள் எல்பிஜி தட்டுப்பாடால் முடங்கியுள்ளன. இதனால் ஊழியர்களுக்கு உணவு கிடைப்பது கடினமாகியுள்ளது. மேலும், அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கான பெட்ரோல், டீசல் விநியோகமும் எப்போது வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து, நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மார்ச் 12 மற்றும் 13 ஆகிய இரு நாட்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: தொடரும் எரிவாயு தட்டுப்பாடு.. 2வது நாளாக முடங்கிய ஆட்டோக்கள்.. தவிக்கும் சென்னை மக்கள்..!!
நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் இது குறித்து உறுதிப்படுத்தியுள்ளனர். பல கேன்டீன் வழங்குநர்கள் எல்பிஜி இல்லாததால் செயல்பட முடியாமல் போனதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மிக முக்கியமான பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும் என்றும் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, எல்பிஜி தட்டுப்பாடு தனியார் துறை நிறுவனங்களின் இயக்கத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கு தெளிவான எடுத்துக்காட்டாக உள்ளது. சென்னை போன்ற ஐடி மையங்களில் உள்ள பல நிறுவனங்கள் இதே போன்ற சவால்களை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது. மேலும், எரிபொருள் சேமிப்புக்காக வீட்டிலிருந்து பணியாற்றுவதை ஊக்குவிக்க வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகிறது.
இந்த தட்டுப்பாடு விரைவில் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போதைய சூழலில் நிறுவனங்கள் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடுகளை செய்வது அவசியமாகியுள்ளது.
இதையும் படிங்க: +2 மாணவி படுகொலை... பிணவறையை முற்றுகையிட்ட உறவினர்கள்..! பதற்றம்..!!