தமிழகத்தில் ஜூலை மாத மின்சாரக் கட்டணம் வழக்கத்தை விட அதிகமாக வந்துள்ளதாக மாநிலம் முழுவதும் ஏராளமான வீட்டு மின் நுகர்வோர் புகார் தெரிவித்துள்ள நிலையில், அந்த புகார்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் சுமார் 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, முதலமைச்சர் ஜோசப் விஜய் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக வீட்டு மின் நுகர்வோருக்கான இலவச மின்சார சலுகையை அறிவித்தார். அதன்படி, 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும், 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு முந்தைய நடைமுறையைப் போல 100 யூனிட் இலவச சலுகை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருந்தாலும், சமீபத்தில் வெளியான ஜூலை மாத மின்கட்டணப் பட்டியல்கள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. முந்தைய மாதங்களில் செலுத்திய தொகையை விட இந்த முறை இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு பகுதிகளில் இருந்து புகார்கள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: "போக்சோ வழக்குகளுக்குக் கெடு!" - 2 மாதங்களில் விசாரணையை முடிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
குறிப்பாக, கடந்த முறை ரூ.300 அளவில் மின் கட்டணம் செலுத்தியவர்கள், இந்த மாதம் ரூ.800-க்கும் அதிகமாக கட்டணம் வந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். 200 யூனிட் இலவச மின்சார சலுகை அமலில் இருந்தபோதும், எதிர்பார்த்ததை விட அதிக தொகை கட்டணமாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் பலர் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து, சமூக வலைதளங்களிலும் மின் கட்டண ரசீதுகளை பகிர்ந்து பலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பொதுவாக கோடை காலங்களில் குளிர்சாதனப் பெட்டி, ஏர் கண்டிஷனர், மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பதால் மின் நுகர்வும் அதனுடன் மின் கட்டணமும் உயர்வது இயல்பானதாக கருதப்படுகிறது. இருப்பினும், இந்த முறை பருவநிலை மாற்றத்தால் மட்டும் இத்தகைய உயர்வு ஏற்பட்டதாகக் கூற முடியாது என்றும், வழக்கத்திற்கு மாறாக அதிக கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக பலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். மேலும், மின்கட்டண கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டதா அல்லது கட்டண உயர்வு அமைதியாக அமல்படுத்தப்பட்டதா என்ற கேள்விகளும் பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளன.
இந்த நிலையில், எழுந்துள்ள புகார்களை தீவிரமாக எடுத்துக்கொண்ட தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் அருண் ராய், மாநிலம் முழுவதும் 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்படி, முதன்மை பொறியாளர்கள் தலா 25 மின் இணைப்புகளையும், உதவிப் பொறியாளர்கள் தலா 100 மின் இணைப்புகளையும் நேரடியாக ஆய்வு செய்து, மின் பயன்பாடு மற்றும் கட்டண கணக்கீடு சரியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆய்வுப் பணிகள் அனைத்தும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் நிறைவடைந்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறு ஆய்வின் போது கணக்கீட்டில் பிழைகள் அல்லது தவறுகள் கண்டறியப்பட்டால், அவற்றை உடனடியாக சரிசெய்து உரிய திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மின்சார வாரிய தலைவர் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கையின் மூலம் பொதுமக்களின் புகார்களுக்கு தீர்வு காணப்படுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: "நாடாளுமன்ற உரை கடும் ஏமாற்றம் அளிக்கிறது!" - ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு!