தமிழக சட்டப்பேரவையில் இன்று தொழில் துறை மற்றும் கனிம வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வந்தபோது, ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான பேச்சுவார்த்தை காரசார விவாதமாக உருவெடுத்தது. பொறுப்பு அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே நடந்த இந்த மோதல், இறுதியில் சட்டசபையில் அமளியை ஏற்படுத்தியது.
விவாதத்தின் போது செங்கோட்டையன் பேசுகையில், “ஆறு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டார்கள். அந்தத் தொகுதிகளின் குறைகளை அமைச்சர்கள் தலா ஒரு நாள் ஒதுக்கிக் கேட்டறிந்து வருகிறோம்” என்று தெரிவித்தார். இதற்கு உடனடியாக எதிர்ப்புத் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, “ஒரு நாளில் ஒரு தொகுதியின் கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டுத் தீர்த்துவிட முடியாது. அதனால்தான் எம்.எல்.ஏ. அவசியம். பொறுப்பு அமைச்சர் ஒரு நாள் மட்டும் செல்வார்” என்று வாதிட்டார்.
செங்கோட்டையன் பதிலளிக்கையில், “விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். அதில் நாங்கள் வெற்றி பெறுவோம். அத்தனை பேரும் வெற்றி பெறுவார்கள்” என்றார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, “விவாதம் வேறு திசையில் செல்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வெற்றி பெற்ற பிறகு அந்த எம்.எல்.ஏ. எங்களைச் சந்தித்து மனு கொடுக்கிறார். சட்டசபை நிகழ்ச்சியில் ஒரு நாள் பங்கேற்றுவிட்டு ராஜினாமா செய்து, மேல்மாடியில் உள்ள கட்சியில் சேர்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: ஓராண்டில் மாற்றம்.. அரசு பள்ளிகளும் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும்..!! ஆதவ் அர்ஜூனா உறுதி!!

சபாநாயகர் தலையிட்டு, “உணர்ச்சிவசப்படாமல் நிதானமாகக் கருத்தைத் தெரிவியுங்கள். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதுதொடர்பான விவரங்கள் நீதிமன்றத்தில் உள்ளன” என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து செங்கோட்டையன், “குதிரைப் பேரம் என்றெல்லாம் பேசினார்கள். நீங்கள் நாட்டுக்காக பெரிய கஷ்டப்பட்டது தெரியாதா?” என்று கிண்டல் செய்தார். மேலும் எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் அருண் மனுவை வாபஸ் பெற்றதைச் சுட்டிக்காட்டி, “அது குதிரைப் பேரம் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கையில், “அவரின் மனு தேர்தல் அதிகாரியால் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த நேரத்தில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கு இடையில் மட்டுமே பிரச்சினை இருந்தது. அதை இங்கே இணைக்கக் கூடாது. இருக்கும் கருத்தைப் பேச வேண்டும். எங்களோடு இருந்த எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து உடனடியாக வேறு கட்சியில் இணைகிறார்கள்” என்று எதிர்ப்புத் தெரிவித்தார்.
மைக் அணைக்கப்பட்ட சூழலில் எடப்பாடி பழனிசாமி கொந்தளித்து, “உங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முடியாதா? என்னங்க?” என்று சத்தமிட்டார். இதனால் சட்டப்பேரவையில் பெரும் அமளி ஏற்பட்டது. இந்த சம்பவம், சமீபத்திய ராஜினாமாக்கள் மற்றும் கட்சி மாற்றங்கள் தொடர்பான அரசியல் பதற்றத்தை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: என்னது.. மாமா, மச்சானா..!! சட்டமன்றத்தில் இதெல்லாம் பேசக்கூடாது.. கடிந்துகொண்ட துரைமுருகன்!!