தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அன்னை வி.ஜி. சரவணன் திமுகவில் இணைய பேரம் பேசுவதாக தெரிவித்த நிலையில் குற்றச்சாட்டு தொடர்பாக ஏரலில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வந்த உளவுத்துறை அதிகாரி விசாரணை நடத்தினார்.
தமிழக வெற்றி கழகத்தினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களை தங்கள் கட்சியில் இணைத்து வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வரும் நிலையில் அவற்றை திசை திருப்பும் விதமாக தவேக எம்எல்ஏக்களிடம் திமுகவில் சேர கோரி பேரம் பேசுவதாக புகார் தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அன்னை வி.ஜி. சரவணன் ஏரலில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தன்னை திமுகவில் சேர அறிவுறுத்தி அதிகமானோர் தன்னிடம் பேரம் பேசியதாகவும், 50 கோடி முதல் 100 கோடி ரூபாய் வரை தருவதாகவும் அதை தொடர்ந்து தன்னை திமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் போனில் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்டார் ஓட்டலில் நடந்த மீட்டிங்... தவெக எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக பேரம்... ரூ.180 கோடிக்கு ஓ.கே. சொன்ன முக்கியப்புள்ளி...!
இந்த புகார் தமிழகம் முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த புகார் தொடர்பாக முதற்கட்ட விசாரணையை உளவுத்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட உளவுத்துறை காவல் ஆய்வாளர் மகாதேவன் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணனிடம் ஏரலில் உள்ள அவரது அலுவலகத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையின் போது, சட்டமன்ற உறுப்பினர் சரவணன், தன்னிடம் போனில் பேசிய ஆடியோ மற்றும் செல்போன் எண்களை காவல்துறை உளவுத்துறை அதிகாரியிடம் நேரில் காண்பித்தும் அவருக்கு தேவையான ஆவணங்களை வழங்கியதாக கூறப்படுகிறது. தமிழக அரசியல் களத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மாற்றுக் கட்சியினர் கட்சி மாற நடைபெறும் தொடர் குதிரை பேர குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மூன்று பக்கமும் முடங்கிய மும்பை... கிடுகிடுவென அதிகரிக்கும் பலி எண்ணிக்கை... விளாசி எடுக்கும் கனமழை...!