தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர் நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொலை வழக்கு ஒன்று ஒரு ஆண்டுக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வீட்டு வேலை செய்யும் தொழிலாளியான அஞ்சு (40) என்பவரை அவரது இளைய மகளும், அந்தச் சிறுமியின் காதலனும் சேர்ந்து கொலை செய்து, சடலத்தை வீட்டுக்குள் புதைத்து மறைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சு கணவருடன் பிரிந்து வாழ்ந்து வந்தார். அவருக்கு 20 வயது மூத்த மகள் ரோஷிணி குமார் மற்றும் 17 வயது இளைய மகள் ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2025 மே 12-ம் தேதி வேலைக்குச் சென்ற அஞ்சு வீடு திரும்பவில்லை. அவரது மூத்த மகள் ரோஷிணி, அக்டோபர் 17-ம் தேதி போலீசில் தாய் காணாமல் போனதாக புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மை வெளியானது. அஞ்சுவின் இளைய மகளுக்கும், பீஹாரைச் சேர்ந்த 22 வயது மோந்தி குமார் சிங் (மோந்தி ராஜ் என்றும் அழைக்கப்படுபவர்) என்பவருக்கும் இடையே காதல் இருந்தது. 2023 டிசம்பரில் சமூக வலைதளம் மூலம் அறிமுகமான இருவரும் காதலில் ஈடுபட்டனர். இதை அறிந்த தாய் அஞ்சு கடுமையாக எதிர்த்தார்.
இதையும் படிங்க: ஏப்ரல் 3-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை?! புதுச்சேரி நிகழ்ச்சியில் காத்திருக்கும் ட்விஸ்ட்! பாஜகவினர் உற்சாகம்!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை அகற்ற முடிவு செய்த சிறுமியும், அவரது காதலனும் திட்டமிட்டனர். 2025 மே 12-ம் தேதி இரவு, அஞ்சு வேலையிலிருந்து வீட்டுக்கு வந்தபோது, சிறுமி தாயைப் பிடித்துக் கொள்ள, மோந்தி சரமாரியாக நெஞ்சில் கத்தியால் குத்தினார். அஞ்சு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இருவரும் சடலத்தை வீட்டுக்குள் புதைத்து, அதன் மீது கான்கிரீட் போட்டு மறைத்தனர். மூத்த மகள் ரோஷிணி வீட்டுக்கு வந்தபோது, “தாய் அவசர அழைப்பு வந்ததால் வெளியே சென்றுவிட்டார். போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது” என்று தங்கை பொய் சொன்னாள். வீட்டில் புதிய சிமென்ட் பூச்சு பற்றி கேட்டபோது, “எலி தொல்லை இருந்ததால் துளைகளை அடைத்தோம்” என்று பதில் அளித்தாள்.
கொலையுக்குப் பிறகு சிறுமியும் மோந்தியும் ஒன்றாக வாழ்ந்தனர். கடந்த ஜனவரி 8-ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மூத்த மகள் ரோஷிணி, சடலம் புதைக்கப்பட்ட அதே வீட்டில் அறியாமல் வசித்து வந்தார். சமீபத்தில் மோந்தி ஒரு வாகனத்தை விற்க முயன்றபோது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தீவிர விசாரணையில் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
நேற்று முன்தினம் (மார்ச் 25, 2026) இருவரும் கைது செய்யப்பட்டனர். சிறுமி மைனர் என்பதால் அவரை ஜுவினைல் ஹோமுக்கு அனுப்பியுள்ளனர். மோந்தி ரிமாண்டில் உள்ளார். இந்த கொடூர சம்பவம் ஹைதராபாத் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: NDA-விலிருந்து கழன்ற முக்கிய கட்சி... இரவோடு இரவாக இபிஎஸுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்... கூட்டணி கட்சி எடுத்த திடீர் முடிவு...!