ஹார்முஸ் ஜலசந்தி அருகே மேலும் ஒரு இந்தியர்கள் பணியாற்றிய சரக்கு கப்பல் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த 21 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், மூன்று இந்தியர்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காசிய பகுதியில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக, உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து கவனத்தின் மையமாக உள்ளது. இந்த கடல் பகுதியில் பயணிக்கும் வணிக மற்றும் எண்ணெய் கப்பல்களின் பாதுகாப்பு குறித்து பல நாடுகள் கவலை வெளியிட்டு வருகின்றன.
சமீபத்தில், ஓமன் கடற்கரை அருகே கச்சா எண்ணெய் ஏற்றி வந்த ஒரு இந்திய கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகி தீப்பிடித்தது. அந்த சம்பவத்தில் இருந்த 24 இந்திய மாலுமிகளும் உயிருடன் மீட்கப்பட்டனர். அந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்கும் முன்பே, தற்போது மீண்டும் மற்றொரு கப்பல் தாக்கப்பட்டிருப்பது கவலையை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: மாறிமாறி தாக்கிக் கொள்ளும் அமெரிக்கா - ஈரான்!! போர் பதற்றத்தில் தவிக்கும் மேற்காசிய நாடுகள்!
இன்று ஓமன் அருகே ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த சரக்கு கப்பலில் திடீரென தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், உடனடியாக அவசர உதவி கோரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தகவல் கிடைத்தவுடன் ஓமன் கடற்படை மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் மொத்தம் 28 மாலுமிகள் இருந்தனர். இவர்களில் 24 பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீப்பிடித்த கப்பலில் இருந்து 21 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். எனினும், மூன்று இந்தியர்கள் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலை யார் நடத்தினர் என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. தாக்குதல் நடந்த விதம் மற்றும் அதன் பின்னணியை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடலில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச சமூகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய தாக்குதல், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரியாலிட்டியை புரிஞ்சுக்கோங்க! அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஈரான் அமைச்சர் அட்வைஸ்!