தமிழக இளைஞர்கள் கூடுதல் ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளுக்காகப் பெங்களூரு, ஹைதராபாத் போன்ற வெளிமாநிலப் பெருநகரங்களை நோக்கிப் புலம்பெயர்வதைத் தடுத்து, தமிழகத்திலேயே பன்னாட்டு எம்.என்.சி (Multi-National Company) தொழிற்சாலைகளை உள்கட்டமைப்பு ரீதியாகக் கொண்டு வருவதற்கான விரிவான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு உள்கட்டமைப்பு திட்டப் பணிகளைத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா இன்று நேரில் சென்று தீவிர ஆய்வு நடத்தினார். முதலாவதாக, சிவகாசி அருகே பாறைப்பட்டியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ வைக்கப்படுவதால் ஏற்படும் நச்சுப் புகையினால், சுற்றுவட்டாரக் கிராம மக்களுக்குச் சுவாசக் கோளாறு மற்றும் கண் எரிச்சல் போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாகப் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அமைச்சர் அங்கு ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் அறிவியல் பூர்வமாகப் புரோட்டோகால்களைப் பின்பற்றி குப்பைக் கிடங்கைச் செயல்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, விஸ்வநத்தம் சாலையில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் மாநகராட்சி மாநாட்டு அரங்கக் கட்டுமானப் பணிகளை அமைச்சர் கீர்த்தனா நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அங்குப் பணிபுரியும் தொழிலாளர்களின் புள்ளிவிவர விபரங்களை ஒப்பந்ததாரரிடம் கேட்டறிந்தார். அங்கு 30 வெளிமாநிலத் தொழிலாளர்களும், வெறும் 25 உள்ளூர் தொழிலாளர்களும் மட்டுமே பணிபுரிவதைக் கண்டு கடும் அதிருப்தியடைந்த அமைச்சர், ஏன் உள்ளூர் பணியாளர்களுக்கு முதல் வாய்ப்பு வழங்காமல் வெளிமாநிலத் தொழிலாளர்களை அதிகளவில் ஈடுபடுத்துகிறீர்கள்? எனக் கடிந்து கொண்டார். இதுபோன்ற அரசு உள்கட்டமைப்புக் கட்டுமானப் பணிகளில் முற்றிலும் உள்ளூர் தொழிலாளர்களுக்கே முன்னுரிமை வழங்கி வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: என்கிட்ட அதைப் பத்தி விவாதிக்க தயாரா? - திமுகவுக்கு தில்லா சவால் விட்ட அமைச்சர் கீர்த்தனா...!
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தமிழக அரசிடமிருந்து 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என உறுதி அளித்ததன்படி, அதற்கான தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் விரிவாகப் பேசவுள்ளேன். தமிழகத்தில் காலங்காலமாக அடிப்படை தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் சார்ந்த தொழிற்சாலைகள் தான் வந்துள்ளன. ஆனால் தற்போதைய இளைஞர்களுக்கு எம்.என்.சி போன்ற கூடுதல் ஊதியம் பெறும் பன்னாட்டு நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் அதிகளவில் தேவைப்படுகின்றன. அதற்காக அவர்கள் வெளிமாநில பெருநகரங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க, இங்கேயே எம்.என்.சி உள்கட்டமைப்பைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு ஏதுவாக இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்த உள்ளூர் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சிறப்புப் பயிற்சிகள் வழங்க 100% பயனுள்ள திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், சிவகாசியில் கூடுதல் தீயணைப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது, வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அது துரிதமாக அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: உங்க பண்ணையார் வாழ்க்கையை எல்லாம் விட்டுட்டு... திமுகவிற்கு தில்லா சவால் விட்ட அமைச்சர் கீர்த்தனா...!