தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம், காமராஜர் காலை உணவுத் திட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்திகளை மறுத்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கான இந்த முக்கிய திட்டத்தின் பணிகள் புதிதாக தனியாருக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதாக சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், இது உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2022-ஆம் ஆண்டு நகர்ப்புறப் பகுதிகளில் தொடங்கப்பட்ட காமராஜர் காலை உணவுத் திட்டம் முதல் நாளிலிருந்தே ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவை உரிய நேரத்தில் வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்ட சேவை வழங்குநர்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. இந்த நடைமுறை தொடக்கம் முதல் தற்போது வரை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதனிடையே, சமூக ஊடகங்களில் சிலர் “திட்டத்தின் பணிகள் புதிதாக தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன” என்று கூறி பரப்பும் செய்திகள் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டத்தை தவறாக சித்தரிப்பதாக அரசு சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகைய தவறான தகவல்கள் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, அரசின் நல்லெண்ணத்துடன் செயல்படுத்தப்படும் திட்டத்தின் மீதும் தேவையற்ற சந்தேகத்தை உருவாக்குகின்றன.
இதையும் படிங்க: சுட சுட உணவு..! ON TIME-ல இருக்கணும்..! காமராஜர் காலை உணவு திட்ட டெண்டர் நிறுவனங்களுக்கு நிபந்தனை..!
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், “கடந்த 2022-ஆம் ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் நகர்ப்புறப் பகுதிகளில் தொடங்கப்பட்டதிலிருந்து, ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்ட சேவை வழங்குநர்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. தற்பொழுதும் அதே நடைமுறையே பின்பற்றப்படுகிறது” என திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.
மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக அரசு கொண்டு வந்துள்ள இத்திட்டம் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் தவறான தகவல்களை நம்பி பரப்பாமல், அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டும் நம்புமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தவறான செய்திகளைப் பரப்புவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதையும் நினைவூட்டியுள்ளது.
இதையும் படிங்க: பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!