முக்கிய உற்சவமான திருத்தேர் உற்சவம் துவங்கி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். ஐந்து நிலைகள் கொண்ட 73 அடி உயர திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி காட்சி அளித்த படி பவனி வரும் வரதராஜ பெருமாள்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் திருக்கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று முக்கிய உற்சவமான திருத்தேர் உற்சவம் நடைபெற்று வருகிறது.
திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, சிக்கு தாடை கொண்டை அணிந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் தாயார் சடாரியும் மேளதாளங்கள் முழங்க, கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தேரடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருத்தேரில் எழுந்தருள செய்தனர்.
இதையும் படிங்க: இபிஎஸ் உடன் சண்டையா? சமாதானமா?... இரவோடு இரவாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எடுத்த அதிரடி முடிவு...!
வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டத்தை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ், அமைச்சர்கள் தென்னரசு, ஆர்.வீ ரஞ்சித்குமார், உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.
ஐந்து நிலைகள் கொண்ட 73 அடி உயரம் உள்ள திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளிய வரதராஜ பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கோவிந்தா கோவிந்தா கோஷமிட்டு வணங்கி வழிபட்டனர்.
பின்னர் மேள தாளங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க திருத்தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கோயம்பேடு பார் கொடூரத்தில் மிகப்பெரிய திருப்பம்... அதிகாலையிலேயே அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்...!