பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் பள்ளி மாணவர்களிடம் மொபைல் போன் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் புதிய வரைவு கொள்கையை மாநில அரசு வெளியிட்டுள்ளது. முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ள இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நேற்று இந்த வரைவு கொள்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், “மொபைல் போன் அதிகம் பயன்படுத்துவதால் மாணவர்களின் மனநலம் மற்றும் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. தேவையற்ற பதற்றம், தூக்கமின்மை, கவனச்சிதறல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் அவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்படுகிறது” என்றார்.
இந்தப் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இந்த வரைவு கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியும் தனக்கென டிஜிட்டல் பயன்பாட்டுக் கொள்கையை வகுக்க வேண்டும் என்று அமைச்சர் அறிவித்தார்.
இதையும் படிங்க: தேர்தல் பணிகள் மும்முரம்..!! ஹை.. 4 நாள் ஸ்கூல் லீவு..!! புதுச்சேரி மாணவர்கள் குஷியோ குஷி..!!

முக்கிய விதிமுறைகள்:
- ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.
- இணையத்தை சரியான முறையில் பயன்படுத்துவது, சைபர் மோசடியில் இருந்து தற்காத்துக் கொள்வது உள்ளிட்டவை மாணவர்களுக்கு பாடமாகக் கற்றுக் கொடுக்கப்படும்.
- மொபைல் பயன்பாட்டால் ஏற்படும் மனநல பிரச்னைகளை ஆசிரியர்கள் உடனடியாக கண்டறிந்து, மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த கொள்கையின் மூலம் மாணவர்கள் டிஜிட்டல் கல்வியறிவு பெற்று, ஆரோக்கியமான வழியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்வார்கள் என்று அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நம்பிக்கை தெரிவித்தார்.
மாணவர்களின் மனநலப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து கொண்டு வரப்பட்டுள்ள இந்த வரைவு கொள்கை, பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவதால் இளம் தலைமுறையினருக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க இந்த நடவடிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
கர்நாடக அரசின் இந்த முயற்சி, பிற மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொபைல் போன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதன் மூலம் மாணவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மிரளப்போகுது ஸ்டேட்டு… விசிலு சத்தம் கேட்டு..!! திருச்சியில் பாட்டு பாடி வாக்குச் சேகரித்த விஜய்..!!