கேரள அரசு போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முழுமையாக ஒழிக்கும் வகையில் ‘ஆபரேஷன் டூஃபான்’ என்ற பெயரில் பிரம்மாண்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இது மாநில அளவில் மிகப் பெரிய அளவிலான போதை எதிர்ப்பு இயக்கமாக அமைந்துள்ளது. கேரள எல்லைகளில் நுழையும் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் லாரிகள், சரக்கு வாகனங்கள், பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து ஊர்திகளும் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன.
எல்லைப் பகுதிகளில் பல அடுக்குகளில் கண்காணிப்பு மற்றும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான வலுவான பாதுகாப்பு வலை பின்னப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை வேரறுப்பதற்கு மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் எனக் கருதும் கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், தமிழ்நாடு முதலமைச்சருக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளார்.
அதேபோல் புதுச்சேரி மற்றும் கர்நாடக முதலமைச்சர்களுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சதீசன், “ஆபரேஷன் டூஃபானை மேலும் வலுப்படுத்தி, மாநிலங்களுக்கு இடையிலான போதை வலையமைப்புகளை முழுமையாகத் தகர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். மேம்பட்ட ஒருங்கிணைப்பு, நிகழ்நேர உளவுத் தகவல் பகிர்வு, கூட்டு ரேட் நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த திட்டமிடல் ஆகியவை போதை அச்சுறுத்தலை வேரோடு பிடுங்குவதற்கு மிக முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க விஜய்! முதல்வர் சொன்ன குட்டி ஸ்டோரி! சிவசங்கர் கொதிப்பு!

இதன் ஒரு பகுதியாக, ஒரு கூட்டுச் செயல் திட்டத்தை வகுப்பதற்கு உயர்மட்டக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநில காவல்துறைத் தலைவர் ரவடா சந்திரசேகர் மற்றும் தந்திரோபாயத் தளபதி புட்டா விமலாதித்யா ஆகியோர், உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவின் தலைமையில், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் புதுச்சேரியின் உள்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் சிறப்புக் கலந்துரையாடலை நடத்தவுள்ளனர். இந்த சந்திப்பில் உளவுப் பகிர்வு வழிமுறைகள், எல்லைப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைத் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போதைப்பொருள் ஒழிப்பு என்பது ஒரு மாநிலத்திற்கு மட்டும் உரிய பிரச்னையல்ல. அண்டை மாநிலங்களுடன் இணைந்து செயல்பட்டால்தான் நிரந்தரமான தீர்வு கிடைக்கும் என்பதை இந்த முயற்சி தெளிவாக உணர்த்துகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு தரப்பினரை போதைப்பொருளின் பிடியிலிருந்து காப்பாற்றும் வகையில் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை பயனுள்ளதாக அமையும் எனக் கருதப்படுகிறது. மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதன் மூலம் தென்னிந்தியாவில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
இதையும் படிங்க: உங்க அப்பா எங்க காணோம்?! முதல்வர் விஜய் குட்டி ஸ்டோரி! ரசித்து சிரித்த எடப்பாடி!