ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தி தற்போது மூடப்பட்டுள்ளதால், அந்த வழியாக செல்லும் எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் தடைபடுகின்றன. இதனால், உலகெங்கும் எரிபொருள் விலை உயர்வுடன் சேர்ந்து பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
இந்தியா தனது எரிபொருள் தேவையில் பெரும்பகுதியை இறக்குமதியை நம்பியுள்ளது. குறிப்பாக, சமையல் எரிவாயு (LPG) தேவையில் சுமார் 60-67 சதவீதம் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலானவை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகின்றன. போர் காரணமாக ஜலசந்தி மூடப்பட்டதால், எல்பிஜி விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் வணிக மற்றும் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பல ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் எரிவாயு கிடைக்காததால் செயல்பாடுகளை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சில இடங்களில் போராட்டங்கள் கூட எழுந்துள்ளன. வீட்டு பயன்பாட்டுக்கு சிலிண்டர் கிடைத்தாலும், எதிர்காலத்தில் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் அதிக அளவில் முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால், பதிவு முறைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வடமாநில மாணவிக்கு நேர்ந்த கொடூரம்... தேர்வுக்கு உதவுவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர்..!!
முன்பு செல்போன் எண் மூலம் எளிதாக முன்பதிவு செய்ய முடிந்த நிலை மாறி, தற்போது ஆயில் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவச செயலிகள் பட்டியலில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் IndianOil ONE செயலி முதலிடத்தை பிடித்துள்ளது.
நீண்ட காலமாக அந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்த பிரபல ஏஐ சார்ந்த செயலியான ChatGPTயை இப்போது பின்னுக்கு தள்ளியுள்ளது IndianOil ONE. இந்த செயலி மூலம் சிலிண்டர் முன்பதிவு, டெலிவரி கண்காணிப்பு, புதிய இணைப்பு போன்றவற்றை எளிதாக செய்ய முடிவதால், மக்களின் தேவைக்கு ஏற்ப இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல், HP Pay, Hello BPCL போன்ற பிற எரிபொருள் நிறுவன செயலிகளும் பதிவிறக்கங்களில் முன்னேறியுள்ளன.

இந்த நெருக்கடி இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பு மற்றும் இறக்குமதி சார்ந்த பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளது. அரசு வீட்டு பயன்பாட்டுக்கு முன்னுரிமை அளித்து வரும் நிலையில், வணிக பயன்பாட்டுக்கு சில நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டாலும், முழு நிவாரணம் கிடைக்க சிறிது காலம் ஆகலாம்.
சில எல்பிஜி டேங்கர்கள் ஜலசந்தி வழியாக அனுமதிக்கப்பட்டு இந்தியா நோக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், போர் நீடித்தால் எரிபொருள் தட்டுப்பாடு மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.இந்த சூழலில், மக்கள் அமைதியாக இருந்து அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக அலுவலகத்தில் பரிசு பொருட்கள் விநியோகம்! வாக்காளர்களை கவர களமிறங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்!