தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் அரசியல் சார்ந்த கூட்டங்கள் மற்றும் விழாக்களை நடத்துவதற்கு முழுமையாகத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு விரிவான பதிலளிக்க மேலும் 4 வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திமுக சார்பில் வழக்கறிஞரும் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான வி. கவி கணேசன் தொடர்ந்த பொதுநல வழக்கில், தமிழகப் பள்ளிகளில் அரசியல் செயல்பாடுகளுக்குத் தடை விதித்துத் தெளிவான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், கல்வி நிலையங்களில் தொடர்ச்சியாக அரசியல் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட பொறுப்பான அதிகாரிகளை இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்க வேண்டும் என முறையிட்டார்.
இதையும் படிங்க: "தேர்தல் அரசியலுக்கு குட்பை".. ஓய்வு முடிவை அறிவித்த சித்தராமையா!
இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில் பள்ளிகளில் அரசியல் நிகழ்வுகள் நடத்தப்பட்டால், அதுதொடர்பான உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரலாம் எனத் தெரிவித்தனர்.
மேலும், மனுதாரரின் குற்றச்சாட்டுகளுக்குத் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க மேலும் 4 வாரங்கள் அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: காங்கிரஸ் புதிய அரசியல் கணக்கு.. ஆகஸ்ட் 1-ல் தமிழகம் வரும் ராகுல்.. மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..!