உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா குடமுழுக்கு விழா அழைப்பிதழில் அறங்காவலர் குழுவினரின் பெயர்களைப் புறக்கணித்துவிட்டு இணை ஆணையர் மட்டுமே தன்னிச்சையாகச் செயல்பட்டிருப்பதற்குச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளதுடன், கோயில் என்பது மக்கள் அமைதியைத் தேடி வரும் இடம்; அங்கு இந்து சமய அறநிலையத்துறை அரசியல் செய்வது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல எனத் தீர்ப்பளித்துள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி மகா குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அச்சிடப்பட்ட விழா அழைப்பிதழில், கோயிலின் அறங்காவலர் குழுவினரின் பெயர்கள் முற்றிலுமாகத் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, திருக்கோயிலின் நிர்வாகம் மற்றும் குடமுழுக்குத் திருப்பணிகளில் அறங்காவலர்கள் தங்களது சட்டப்பூர்வக் கடமைகளை ஆற்றுவதிலிருந்து சட்டவிரோதமாகத் தலையிடுவதோ அல்லது தங்களை விலக்கி வைப்பதோ கூடாது என உத்தரவிடக் கோரி அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்புலட்சுமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: தமிழுக்கு முக்கியத்துவம் தாங்க! மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக வழக்கில் விரைவில் முக்கிய தீர்ப்பு!
இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு இன்று தீவிர விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திலக் குமார், அறநிலையத்துறையின் இந்தச் செயல் சட்டவிரோதமானது எனவும், இதற்கு முன் நடைபெற்ற அனைத்துக் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழ்களிலும் அறங்காவலர் குழுவின் பெயர்கள் இடம்பெற்றுள்ள மரபையே இங்கும் பின்பற்ற உத்தரவிட வேண்டும் எனவும் வாதிட்டார்.

இதற்குப் பதிலளித்த அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், ஏற்கனவே 3,000 அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுவிட்டதால், நீதிமன்றம் உத்தரவிட்டாலும் மீண்டும் புதிய அழைப்பிதழ்களை அச்சடித்துக் கொடுப்பது சாத்தியமற்ற சூழல் உள்ளது எனத் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்து சமய அறநிலையத்துறை செயலாளரோ அல்லது ஆணையரோ இதில் தலையிடவில்லை எனத் தெரிவித்துள்ள நிலையில், கோயில் செயல் அலுவலரும் இணை ஆணையருமான செல்லத்துரை தன்னிச்சையாகச் செயல்பட்டு அறங்காவலர் குழுவின் பெயரை நீக்கிவிட்டு, தனது பெயரை மட்டுமே அழைப்பிதழில் பதிவு செய்துள்ளது அப்பட்டமான தவறு. அழைப்பிதழ்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுவிட்ட காரணத்தால், குடமுழுக்கு விழா முடிந்தவுடன் திருக்கோயிலில் முறைப்படி நிறுவப்படும் கல்வெட்டில் அறங்காவலர் குழுவினரின் பெயர்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும்" என அதிரடியாக உத்தரவிட்டார்.
தொடர்ந்து அறநிலையத்துறையின் போக்கைக் கண்டித்த நீதிபதி, திருக்கோயில் என்பது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மன அமைதியைத் தேடி வரக்கூடிய புனிதமான இடம். அத்தகைய இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அரசியல் செய்துள்ளது மிகவும் வருந்தத்தக்க செயல். மத வழிபாட்டுத் தலங்களில் அரசியல் புகுத்தப்படுவது எக்காரணத்தைக் கொண்டும் ஏற்கத்தக்கது அல்ல. இனிவரும் காலங்களில் வழிபாட்டுத் தலங்களில் எவ்வித அரசியல் நிகழ்வுகளும் இன்றி அனைத்தும் விதிமுறைகளின்படி மட்டுமே நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் காட்டமாகத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட கூடுதல் தலைமை வழக்கறிஞர், அறநிலையத்துறை குறித்த இந்தக் கருத்துகளைத் தீர்ப்பு உத்தரவில் பதிவு செய்ய வேண்டாம் எனக் கோரிக்கை வைத்தார். எனினும் அதனை ஏற்க மறுத்த நீதிபதி, நீங்கள் செய்தது முற்றிலும் தவறு; எனவே இந்த விமர்சனக் கருத்துகள் நீதிமன்ற உத்தரவில் கண்டிப்பாக இடம்பெறும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: வடலூர் பெருவெளி பெருவெளியாகவே பாதுகாக்கப்படும்! சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை உறுதி!