சென்னை/மதுரை: மதுரை ரிங் ரோடு பகுதியில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் மாநாடுகளுக்கு தடை விதிக்கக் கோரிய பொதுநல வழக்கை தள்ளுபடி செய்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை, டோல்கேட் கட்டணத்தில் எந்தவொரு தனிநபர் அல்லது அரசியல் கட்சிக்கும் விதிகளை மீறி விலக்கு அளிக்கக் கூடாது என்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி வழக்கறிஞர் ஜெயருத்ரன் தாக்கல் செய்த மனுவில், “மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உத்தங்குடி முதல் கப்பலூர் வரை ரிங் ரோடு அமைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் அடிக்கடி அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் பொதுக்கூட்டம், மாநாடு நடத்துகின்றன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பொதுக்கூட்டத்துக்கு வரும் வாகனங்கள் டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் செல்கின்றன. எனவே அப்பகுதியில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இதையும் படிங்க: விஜய்க்கு பாதுகாப்பு இல்லை..! அமித் ஷாவுக்கு பறந்த கடிதம்..! தவெக கடும் குற்றச்சாட்டு..!!
இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி என். சதீஷ்குமார் அமர்வு விசாரித்தது. மத்திய அரசு சார்பில் துணை சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன், தமிழக அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞர் மகாராஜன் ஆஜரானார்கள்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ரிங் ரோட்டில் பெரும்பாலான வாகனங்களில் FASTag RFID வசதி இணைக்கப்பட்டுள்ளது. டோல்கேட் கட்டணம் தானியங்கி முறையில் வசூலிக்கப்படுகிறது. டோல்கேட்களை நிர்வாகம் செய்யும் நிறுவனம், விதிகளின்படி விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்கள் தவிர வேறு எந்த வாகனத்துக்கும் விலக்கு அளிப்பதில்லை” என்று கூறினர்.

மேலும், “டோல்கேட் கட்டணம் தானியங்கி முறையில் வசூலிக்கப்படாத சமயங்களில் கூட, வாகனம் டோல்கேட்டை கடந்த பிறகும் ஊழியர்கள் கட்டணத்தை பற்று வைக்கின்றனர். இதனால் நிதி இழப்பு ஏற்பட்டால் அது நிறுவனத்துக்குத்தான். அரசுக்கு பாதிப்பு இல்லை” என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
“போதிய ஆதாரங்கள் இல்லாமல், வெறும் எழுத்துப்பூர்வ மற்றும் வாய்மொழி வாதங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முடிவுக்கு வர முடியாது. அரசியல் கட்சிகள் அல்லது தனிநபர்களுக்கு டோல்கேட் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுவதாக பொதுவான குற்றச்சாட்டை மட்டுமே மனுதாரர் முன்வைத்துள்ளார். குறிப்பிட்ட எந்த விதிமீறலையும் சுட்டிக்காட்டவில்லை” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
எனினும், “டோல்கேட்கள் எவ்வித இடையூறுமின்றி பராமரிக்கப்பட வேண்டும். விதிகளை மீறி, எந்தவொரு தனிநபருக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ டோல்கேட் கட்டணத்தில் எவ்வித விலக்கும் அளிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை ரிங் ரோடு பகுதியில் அரசியல் பொதுக்கூட்டங்கள் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் டோல்கேட் கட்டண விவகாரம் தொடர்பான இந்த உத்தரவு, அரசியல் கட்சிகளுக்கு புதிய வழிகாட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சீட் கிடைக்காத விரக்தியில் குடைச்சல் கொடுக்கும் குட்டி தலைகள்! தீராத தலைவலியில் இடைத்தலைவர்கள்!