தமிழக அரசு 2025 அக்டோபர் 6-ம் தேதி ஒரு முக்கிய அரசாணையை வெளியிட்டது. கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள சாதிப் பெயர்களை அடையாளம் கண்டு நீக்கி, புதிய பெயர்கள் சூட்டுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை இந்த உத்தரவு கொண்டிருந்தது. ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற பெயர்களை நீக்கி, தமிழ் இலக்கியம், சமூக சீர்திருத்தவாதிகள், தலைவர்கள் போன்றோரின் பெயர்களை வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19-ம் தேதிக்குள் முடிக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அரசாணைக்கு எதிராக மதுரையைச் சேர்ந்த இந்து வழக்கறிஞர்கள் முன்னணியின் மாநில துணைத் தலைவர் எஸ். பரமசிவம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

மனுவில், சாதிப் பெயர்கள் நீக்கும் முடிவு பாராட்டத்தக்கது என்றாலும், அரசாணை அவசர கதியில் கொண்டுவரப்பட்டது, நடைமுறை சிக்கல்கள் நிறைந்தது, மக்களின் கருத்துகளைப் பெறாமல் செயல்படுத்த முயற்சிப்பது, தேரல் நோக்கத்துடன் சில தலைவர்களின் பெயர்களை முன்னிலைப்படுத்துவது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பல ஆண்டுகளாக இந்தப் பெயர்களால் எந்தப் பிரச்னையும் எழவில்லை என்றும், இது மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் என்றும் வாதிடப்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கள் விற்பனையை ஏன் அனுமதிக்க கூடாது..? உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி..!
2025 அக்டோபர் 17-ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் அமர்வு சாதிப் பெயர்கள் நீக்கும் கொள்கையைப் பாராட்டியது. இருப்பினும், அரசாணையில் தெளிவின்மை இருப்பதாகக் கூறி, இறுதி முடிவு எடுக்கக் கூடாது என உத்தரவிட்டது. சாலைகள், தெருக்களில் உள்ள சாதியப் பெயர்களை மாற்ற பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு அவகாசம் கோரியது. அதிகாரிகளிடம் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டியுள்ளதாக கூறி தமிழக அரசு அவகாசம் கோரியதால் விசாரணையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: திருவள்ளூர் வாயு கசிவு விபத்தல்ல, கொடூரமான படுகொலை: அரசுக்கு எதிராக கே. பாலகிருஷ்ணன் கண்டனம்!