மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தல் இரு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி நேற்று நடியா மாவட்டத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய மம்தா, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.
“தேர்தல் காலத்தில் மட்டும் மேற்கு வங்காளத்துக்கு படையெடுப்பது போல் வருபவர்கள், பாகிஸ்தான் கொல்கத்தாவைத் தாக்குவோம் என்று மிரட்டல் விடுத்தபோது ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அத்தகையோர் ராஜினாமா செய்ய வேண்டும். நாட்டுக்கு எந்த அச்சுறுத்தல் வந்தாலும் நாங்கள் ஏற்க மாட்டோம். அதேபோல் கொல்கத்தாவுக்கு மிரட்டல் வந்தாலும் சும்மா விடமாட்டோம்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மேற்கு வங்காளத்திலிருந்து சுமார் 500 அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறிய மம்தா, இது குறித்து சந்தேகம் எழுப்பினார். “தமிழ்நாட்டில் பாஜகவுக்கும், காங்கிரஸ் மற்றும் ஸ்டாலினுக்கும் இடையே ஏதோ ரகசியப் புரிதல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: காங். வேட்பாளர் தேர்வில் கடும் அதிருப்தி..!! முக்கிய முடிவு எடுத்த மாணிக்கம் தாகூர்..!! அரசியலில் பரபரப்பு..!!
தேர்தல் ஆணையம் மேற்கு வங்காளத்தில் மட்டும் பெருமளவில் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளதாகவும், மற்ற மாநிலங்களில் மிகக் குறைவான அதிகாரிகளையே மாற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். “பாஜக தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை முக்கியப் பதவிகளில் நியமித்து, தங்கள் செயல்பாடுகளை தடையின்றி மேற்கொள்ள முயற்சிக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.
எனினும், மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, டெல்லி அரசியலில் பாஜகவை எதிர்கொள்வதை தங்கள் இலக்காகக் கொண்டு செயல்படப் போவதாக மம்தா அறிவித்தார். “தேவைப்பட்டால் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து பாஜகவுக்கு எதிராகப் போராடுவோம்” என்று வலியுறுத்தினார். மம்தாவின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், மம்தா பானர்ஜியின் கருத்துகளுக்கு தீவிரமான கண்டனம் தெரிவித்துள்ளார். “பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு போராட வேண்டிய இந்த முக்கியமான கட்டத்தில், மம்தா சமநிலையை இழந்து பேசியுள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் வகையில் அவர் பேசியது மிகவும் பொறுப்பற்ற செயல்” என்று அவர் கூறினார்.
“பாஜகவுக்கு எதிராக எப்படி போராட வேண்டும் என காங்கிரஸுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரத்தில் மம்தாவின் இந்தக் கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது” என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சீட்டு கிடைக்கும்னு நினைச்சோம்! இப்பிடி கவுத்திட்டாரே!! மாணிக்கம் தாகூர் ஆதரவாளர்கள் விரக்தி!