மதுரை மாப்பாளையம் ஜின்னா திடலில் அறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுக இருந்தது. எடப்பாடி பழனிசாமி தான் எம்ஜிஆர் ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவை வழிநடத்தக்கூடியவர்.
தொண்டர்களின் எண்ணிக்கை தான் அதிமுக. அதிமுக தொண்டர்கள் இன்றைக்கு உணர்ச்சிகரமாக உள்ளனர். இன்றைக்கு மக்கள் ஒரு மாயையில் வாக்களித்து விட்டனர். சாதாரண ஏழைகளை சட்டமன்ற உறுப்பினர்களாக்கியவர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும். இது போன்ற வரலாறு எந்த கட்சிக்கும் இல்லை.
நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் எல்லாம் அதிமுக அழிந்துவிடும் ஒழிந்துவிடும் என்று சொல்வதை கேட்கமுடியவில்லை. நெஞ்சு பொறுக்கவில்லை. அது தவெகவா இல்லை தற்குறி கூட்டமா என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள். திராவிட இயக்கங்கள் ஒன்றுமே செய்யவில்லை எனக்கூறிய விஜய் ஜெயலலிதா செய்த திட்டங்களை அதிமுக திட்டங்களை தான் விஜய் பேசினார்.
இதையும் படிங்க: ”நடிகன் அவன்.. அப்படி என்ன சாதிச்சான்...” - சி.எம்.விஜய்யை ஒருமையில் விளாசிய செல்லூர் ராஜு...!
35 சதவீதம் தான் வாக்களித்துள்ளனர். 60 சதவீதம் பேர் விஜய்க்கு எதிராக வாக்களித்துள்ளனர். அடுத்தவன் உதவியில் ஆட்சி நடத்துகிறார் விஜய். திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கம்யூனிஸ்டுகள் விசிக ஆதரவோடு ஆட்சியை நடத்துகிறார் விஜய்.
ஆட்சிக்கு வந்து அமர்ந்துவிட்டு கஜானா காலி என சொல்லி எந்தத்திட்டத்தையும் கொண்டு வராமல் இருப்பவர் விஜய். ராஜாஜி, காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, அமர்ந்து அலங்கரித்த முதல்வர் நாற்காலியில் அமர்ந்த விஜய் என்ன செய்தாய் 4 மாதத்தில் மக்களுக்கு. அண்ணா பெரியார் என கொள்கை தலைவர்களை வைத்திருப்பதாக கூறும் விஜய் ஜோசியக்காரன் சொன்னதால் கடற்கரைக்கு பக்கத்தில் தலைமைச்செயலகம் கட்டுகிறார். பேரன் சொன்னான், பேத்தி சொன்னான் என சொல்லி வாக்களித்தீர்களே, உங்களுக்கு விஜய் என்ன செய்தார்.
ஆஸ்தான ஜோதிடர் சொன்னதால் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10வது மாடியில் தனி அலுவலகம். தந்தை பெரியார் போல எத்தனை பெரியார் வந்தாலும் இதுபோன்ற பேர் வழிகளை திருத்த முடியாது. பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகம் அமைந்தால் நீங்கள் தான் நிரந்தர முதல்வர் என ஜோசியர் சொன்னதால் புது கட்டிடம். இந்த கொடுமையெல்லாம் நீங்கள் பார்க்க வேண்டும்.
நாங்கள் வாக்கு கேட்கும் போது நீங்கள் தான் அமைச்சர் வெற்றி பெறுவீர்கள் என சொன்னீங்களே? கடைசியில் எங்களை குறை சொல்லி தற்குறிக்கு ஓட்டு போட்டீர்களே இந்த விஜய் உங்களுக்கு என்ன செய்தார்.
பலகோடி செலவு செய்து முதலீட்டை ஈர்க்க சென்ற முதல்வர் தமிழகத்தில் இருந்து 75 ஆயிரம் கோடி தொழிற்சாலை ஆந்திரா சென்று விட்டதே அதைப்பற்றி தவெக தற்குறிகள் பேசுவார்களா. யானை போனது தெரியாமல் பூனையை பிடிக்க கடல் கடந்து போயிருக்கிறார் முதல்வர்.
அதுமட்டுமல்ல ஒரு நடிகையும் சென்றுள்ளாராம். அவருடன் எத்தனை நடிகை வேண்டுமானாலும் போகட்டும். அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. இது டம்மி முதல்வர் ரீல் ஆட்சி. எங்கள் மம்மி ஆட்சியில் சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடித்தோம். கடந்த பொம்மை முதல்வர் ஆட்சியை விட மோசமாக டம்மி முதல்வர் ஆட்சி இருக்கும் போல.
இன்றைக்கு முதல்வர் துறையிலிலேயே ஊழல் நடந்துள்ளது. லீடர் என்ற தகுதியே விஜய்க்கு இல்லை. ஒரு அதிமுக பகுதிச்செயலாளருக்கு இருக்கும் தகுதி தவெக மாவட்ட செயலாளருக்கு இல்லை.
அதிமுகவை நம்பியவன் கெட்டது இல்லை. நம்பாமல் கெட்டவர்கள் அதிகம். நம்பி சென்ற பலருக்கு தவெகவில் மதிப்பே இல்லை.
எதிர்க்கட்சியாக இருந்த போது வாக்கு சேகரித்து தொண்டன் வீடு வீடாக சென்று ரத்தம் சிந்தி உழைத்தான் மதுராந்தகத்திலும், தாராபுரத்திலும் வெற்றி பெற்றார்கள். ஆனால் இன்று கட்சி மாறி நிற்கிறார்கள். இடைத்தேர்தலை சந்திக்கிறார்கள்.
மானம் ரோசமுள்ளவர்கள் அவர்களுக்கு ஓட்டு போடுவார்களா. என்ன கொடுமை. ஜனநாயகம் உள்ளதா இல்லையா. நிர்வாக குளறுபடி, மக்கள் அவதி, லஞ்சம் என அனைவரும் துன்பத்தில் உள்ளனர். ஆனால் நடிகையோடு போய் கடல் கடந்து சென்று முதல்வர் ஜாலியாக உள்ளார். தவெக கட்சி ஓடவே ஓடாது. விஜய் நடித்த படம் கூட ஓடும். இந்த ஆட்சி நீடிக்காது. 6 மாதம் கூட தாங்காது. இதை உறுதியாக சொல்கிறேன்.
எல்லோரும் ரீல்ஸ் போடுங்க. அதிமுகவினரும் ரீல்ஸ் போடுங்க. உண்மைய போடுங்க. தவெக அவலங்களை போடுங்கள். எதைப்பற்றி கவலை இல்லாத தற்குறி ஆட்சி இன்று நடக்கிறது. இந்த மக்களுக்கு இதை புரிய வையுங்கள் என பேசினார்.
மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் 9000பேருக்கு பாஸ் கொடுக்கப்படும் என சொன்னார் மதுரை அமைச்சர். ஆனால் யாருக்கும் கொடுத்ததாக தெரியவில்லை முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என யாருக்கும் பாஸ் வழங்கவில்லை.
எனக்கே கும்பாபிஷேகம் பாஸ் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: "ஏய் ஜெயிலுக்குப் போறேன்... ஜெயிலுக்குப் போறேன் "... போலீசிடம் வாண்டடாக வம்பிழுத்த தவெக நிர்வாகி கணவர்...!