பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் திருவாரூர் சென்றுள்ளார். காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கலைஞர் கருணாநிதியின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கருணாநிதியின் போராட்டமிக்க பொதுவாழ்வை சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.
இதன் பிறகு திருவாரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின்கீழ் வீடு வீடாக சென்று பிரசாரம் நடத்தினார். மக்கள் நலத்திட்டங்கள் முறையாக சென்று சேர்கிறதா என்றும் பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்தார். ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கவும், மக்களை ஒருங்கிணைத்து அநீதிகளுக்கு எதிராக ஒரணியில் திரட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தால் தொடங்கப்பட்ட ஒரு மாபெரும் முன்னெடுப்பு.

தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மக்களை சாதி, மதம், அரசியல் கடந்து ஒருங்கிணைக்கவும் இந்த இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. மேலும், திமுகவின் உறுப்பினர் சேர்க்கையை வலுப்படுத்துவதோடு, மக்களிடையே திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைப்பதும் இதன் நோக்கமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 3 ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து இயக்கத்தை தொடங்கினார்.
இதன் தொடர்ச்சியாக, திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 68,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து, அரசின் நலத்திட்டங்களை விளக்கி, பரப்புரை செய்து வருகின்றனர். திமுக அரசின் நான்கு ஆண்டுகால சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தும் வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆய்வுக் கூட்டங்களை நடத்தும் ஸ்டாலினுக்கு இது தெரியாதா? எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!!
இதையும் படிங்க: அடுத்த ஸ்கெட்ச் திருவாரூர் மாவட்டத்திற்கா? நாளை கள ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!