தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழ்மட்ட வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, இன்று மற்றும் நாளை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாரில் 57 மி.மீ (6 செ.மீ) மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து பந்தலூர், குழித்துறை, அடையாமடை ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ மழையும், கீழ் கோதையார், தேவாலா, அரக்கோணம் பகுதிகளில் தலா 4 செ.மீ மழையும், வால்பாறை, சோலையார், சின்கோனா, சோழிங்கநல்லூர், தாமரைப்பாக்கம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 முதல் 3 செ.மீ வரையிலும் மழை பதிவாகியுள்ளது.

சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையத்தில் 36.6° செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாகக் கோவை விமான நிலையத்தில் 22.1° செல்சியஸும், மலைப்பகுதிகளில் உதகமண்டலத்தில் 13.2° செல்சியஸும் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: நீலகிரி, கோவை, தேனியில் இன்று கனமழை! சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
வானிலை முன்னறிவிப்பின்படி, இன்று (ஆகஸ்ட் 26) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, டெல்டா மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸாகவும் பதிவாகக்கூடும்.
தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கும் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலின் எச்சரிக்கப்பட்ட பகுதிகளுக்கும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி முனைவர் வி. ஆர். துரை எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: மழை அப்டேட்! கோவை, நீலகிரியில் கனமழை... சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!