இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான கடும் மோதலால் போர்க்களம் போலக் காட்சியளித்தது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்துப் பேசிய பிரதமர், எதிர்க்கட்சிகளின் கடும் முழக்கங்களுக்கு மத்தியிலும் தனது உரையைத் தொடர்ந்தார்.
மாலை 5:40 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி அவைக்குள் நுழைந்தபோது, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று "மோடி.. மோடி.." என உற்சாகமாக முழக்கமிட்டு அவரை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து பிரதமர் தனது உரையைத் தொடங்கினார்.

பிரதமர் பேசத் தொடங்கிய உடனேயே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அரசுக்கு எதிராகக் கடும் முழக்கங்களை எழுப்பினர். அவர்களை அமைதியாக உட்காருமாறு அவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பலமுறை கோரிக்கை விடுத்தும், அவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது.
இதையும் படிங்க: காந்தியின் பேரன், அண்ணாவின் மகன்! மாநிலங்களவையில் கமல்ஹாசன் ஆற்றிய கன்னி பேச்சு!
எதிர்க்கட்சிகளின் முழக்கங்களுக்கு இடையேப் பேசிய பிரதமர் மோடி, "காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் மிகவும் வயதானவர். அவர் நின்றுகொண்டு முழக்கங்களை எழுப்புவது பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. அவர் அமர்ந்து கொண்டே முழக்கமிடலாம்" என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்
.
தொடர்ந்துப் பேசிய பிரதமர், "எதிர்க்கட்சிகள் நான் பேசுவதைக் கேட்க வேண்டும்; உரையாற்ற எனக்கு அனுமதி அளிக்க வேண்டும். நாட்டின் நடுத்தர மக்கள், ஏழைகள் மற்றும் பெண்களின் நலனுக்காக இந்த அரசு செய்துள்ள பணிகளைத் தனது உரையில் குடியரசுத் தலைவர் மிகத் தெளிவாகப் பட்டியலிட்டுள்ளார். அனைத்துத் தரப்பு மக்களுக்கான வளர்ச்சியை இந்த அரசு வழங்கியிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளது வரவேற்கத்தக்கது" என்றார்.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையிலும் பிரதமர் தனது உரையை முழுமையாகப் பதிவு செய்தார். விவாதத்தின் முடிவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: VB-GRAMG சட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தீர்மானம்! மத்திய அரசுக்குக் கடும் எதிர்ப்பு!