நாகர்கோவில் சிறைச்சாலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மனின் உடலைப் பெற்றுக்கொள்ள அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் இறுதியாகச் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த பதற்றமும், தொடர் போராட்டங்களும் முடிவுக்கு வந்துள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சபரிவர்மனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் சாலை மறியல் மற்றும் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற வழிகாட்டுதலின்படி செய்யப்பட்ட உடற்கூராய்வு குறித்த முழு வீடியோ பதிவும் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் தரப்பு மருத்துவ வல்லுநர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த வீடியோவை குடும்பத்தினர் தரப்பில் முழுமையாக ஆய்வு செய்ததில், தற்போது அவர்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசின் அனைத்து உதவிகளும் கிடைக்க உடன் நிற்போம்! சபரிவர்மன் இல்லத்தில் பொன். ராதாகிருஷ்ணன் உறுதி!
சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டதை அடுத்து, சபரிவர்மனின் உடலை வாங்கிக் கொள்வதாக உறவினர்கள் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே 3 சிறை வார்டன்கள் கைது செய்யப்பட்டுள்ள சூழலில், திமுக எம்பி கனிமொழி, பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறி தவெக அரசுக்கு அரசியல் நெருக்கடி கொடுத்திருந்தனர். தற்பொழுது உடலை வாங்க உறவினர்கள் சம்மதித்துள்ளது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தற்காலிக நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கண்ணீர் மல்க முறையிட்ட சபரிவர்மன் குடும்பத்தினர்! நேரில் சென்று ஆறுதல் கூறினார் கனிமொழி எம்.பி.!