உயிர்ம வேளாண்மையில் சிறப்பாகச் செயல்படும் மூன்று உழவர்களுக்கு 2025-2026ஆம் ஆண்டிற்கான சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருதுகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார். தலைமைச் செயலகத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 2025-2026ஆம் ஆண்டிற்கான சிறந்த உயிர்ம உழவர்க்கான விருதுகளை நல்லசிவம், சுப்பிரமணியன் மற்றும் சாதனா ஆகியோருக்கு வழங்கிச் சிறப்பித்தார். நம்மாழ்வார் உயிர்ம வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையிலும், உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், அதில் சிறப்பாகச் செயல்பட்டு இதர உழவர்களையும் உத்வேகத்துடன் ஈடுபடச்செய்யும் உழவர்களைக் கௌரவிக்கும் வகையிலும் சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2025-2026ஆம் ஆண்டில், உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நல்லசிவம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சாதனா ஆகியோருக்குத் தலா 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் பதக்கத்துடன் கூடிய நம்மாழ்வார் விருதுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று வழங்கிச் சிறப்பித்தார்.

நம்மாழ்வார் விருது பெற்ற நல்லசிவம் கடந்த 4 ஆண்டுக்கும் மேலாக இயற்கை இடுபொருட்களைக் கொண்டு சோளம், கரும்பு, மா, தென்னை மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்தும், இயற்கை வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தும் வருவதோடு 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் வகையில் விழிப்புணர்வும் பயிற்சியும் வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்... தவிக்கும் குடும்பங்கள்..! முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.!
சுப்பிரமணியன் கடந்த 10 ஆண்டு காலமாக உயிர்ம வேளாண்மை முறையில் நெல் வகைகள், நிலக்கடலை, குறுமிளகு. தென்னை, வால்நட் போன்றவற்றைச் சாகுபடி செய்தும், அவற்றை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தும் வருகிறார். மேலும், 675-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உயிர்ம வேளாண்மை மற்றும் மதிப்புக்கூட்டுதல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
சாதனா, கடந்த 11 ஆண்டுகளாக உயிர்ம வேளாண்மை முறையில் கம்பு, கேழ்வரகு. உளுந்து, நிலக்கடலை, பச்சைப்பயிறு, வாழை. தென்னை, மா, பலா, கீரை வகைகள் போன்றவற்றை சாகுபடி செய்து வருவதுடன், சிறுதானியம் மற்றும் எண்ணெய் வகைகள் போன்றவற்றை மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்து வருகிறார். மேலும். 472-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உயிர்ம வேளாண்மை குறித்த விழிப்புணர்வும் பயிற்சியும் வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: ரூ.121 கோடியில் 400 காவலர் குடியிருப்புகள்... காணொளி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் விஜய்..!