எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 4-ம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு நடைபெற்ற அன்று, பலத்த காற்றுடன் சென்னையில் மழை பெய்தது. இதன் காரணத்தினால், நுங்கம்பாக்கம், ஆவடி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்கள் மின்தடையினால் போதிய வெளிச்சம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர். திடீர் மின்தடையால் மாணவர்கள் தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் போனதாகவும், இருளில் அமர்ந்து சிரமத்திற்கு உள்ளாகி தேர்வு எழுதியதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, ஆவடி தேர்வு மையத்தில் தேர்வெழுதி பாதிக்கப்பட்ட மாணவர்களின் 16 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுதேர்வு நடத்தக்கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாராணையில், மாணவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து பதிலளிக்க மத்திய அரசு மற்றும் நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டப்பட்டது. மேலும், அதுவரை நீட் முடிவுகளை வெளியிடக்கூடாது எனவும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

ஜூன் 2-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மின் தடை ஏற்பட்ட தேர்வு மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்தாகவும், தேர்விற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக மீண்டும் தேசிய தேர்வு முகமை மறுப்பு தெரிவித்தது. இதனை குறித்து கொண்ட நீதிபதி வழக்கு தொடர்பான தீர்ப்பை ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: நீட் தேர்வில் சாதித்த தமிழக மாணவர்கள்.. மார்தட்டி பெருமிதத்துடன் வாழ்த்து சொன்ன அண்ணாமலை..!
இருதரப்பு வாதங்களை கேட்ட தனி நீதிபதி சி. குமரப்பன், மத்திய அரசு அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டது. சுமார் 22 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்விற்கு, மறுதேர்வு உத்தரவிட்டால், அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் எனக்கூறி மாணவர்களின் கோரிக்கை நிராகரித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

தனி நீதிபதி சி. குமரப்பன் வழக்கை தள்ளுபடி செய்ததை எதிர்த்து, பாதிக்கப்பட்ட 16 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, மறு தேர்வு நடத்த உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனக்கூறி, நீட் மறு தேர்வு நடத்தக்கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்புவனம் இளைஞர் மரண வழக்கில் திடீர் திருப்பம்; முக்கிய சாட்சி டிஜிபிக்கு பகீர் கடிதம்...!