உலக நாடுகள் பலவற்றில் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் மத்திய அரசு நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில் சமநிலையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருவதாக தமிழக பெட்ரோலிய டீலர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “உலகளாவிய எரிபொருள் சந்தைகள் இன்னும் அதிர்வுகளுக்கு உள்ளாகியுள்ளன. பல நாடுகளில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டு வரும் சூழலில், நம் நாட்டில் மத்திய அரசு நுகர்வோரின் நலனையும், பணவீக்க கட்டுப்பாட்டையும் ஒருங்கே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது” என்று கூறினார்.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்த சூழலில் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். சர்வதேச சந்தை அழுத்தத்தை சமாளிக்கும் வகையில், செலவின் ஒரு பகுதியை அந்த நிறுவனங்களே ஏற்றுக்கொண்டு, போக்குவரத்து, வேளாண்மை உள்ளிட்ட முக்கிய துறைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எலெக்ஷன் முடிஞ்சது! பெட்ரோல், டீசல் விலை உயருமா?! ட்விஸ்ட் வைத்த மத்திய அரசு!

“உலகளாவிய அசாதாரண சூழ்நிலையிலும் எரிபொருள் விலையை நிலைத்தன்மையுடன் வைத்திருக்கும் மத்திய அரசின் முயற்சியை தமிழக பெட்ரோலிய டீலர்கள் சங்கம் பாராட்டுகிறது. இது மக்களின் நலனை முன்னிறுத்திய பொறுப்பான நடவடிக்கையாகும்” என்றும் முரளி கூறினார்.
மேலும், எரிபொருள் விலை உயர்வு குறித்து ஆதாரமற்ற வதந்திகள் பரவாமல் இருக்க அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்று டீலர்கள் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் போதிய அளவு இருப்பு உள்ளதாகவும், தடையற்ற விநியோகம் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பெட்ரோல் பங்க்குகள் விதிமுறைகளின்படி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கி வருவதாகவும், அதிக அளவில் வாங்க முயல்பவர்களுக்கு வழங்கப்படாது என்றும் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
உலக அளவில் எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் இருந்தாலும், இந்தியாவில் எரிபொருள் விலை நிலைத்தன்மையை பேணும் மத்திய அரசின் அணுகுமுறை நுகர்வோருக்கு நிம்மதியை அளிப்பதாக பெட்ரோலிய டீலர்கள் சங்கம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: மக்களின் நில உரிமையை அரசு பறிக்க முடியாது!! காஞ்சிபுரம், தாழம்பூர் நில விவகாரம்! சுப்ரிம்கோர்ட் அதிரடி!