நாளை (பிப்ரவரி 7) நாடு முழுவதும் ஓலா, உபர், ரேபிடோ உள்ளிட்ட ஆப் அடிப்படையிலான பைக் டாக்சி ஓட்டுநர்கள் பெரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். ‘ஆல் இந்தியா பிரேக் டவுன்’ என்ற பெயரில் நடைபெறும் இந்த நாடு தழுவிய போராட்டத்தை தெலுங்கானா கிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல தேசிய தொழிற்சங்கங்கள் இணைந்து அறிவித்துள்ளன.
ஓட்டுநர்கள் மிக நீண்ட காலமாக கோரி வரும் முக்கிய கோரிக்கை, ஆட்டோ, டாக்சி, பைக் டாக்சி சேவைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் குறைந்தபட்ச அடிப்படை கட்டணத்தை நிர்ணயிப்பது தான்.
தற்போது தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை மாற்றுவதால், குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் ஓட்டுநர்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்படுகிறது. பலர் வறுமைக்கு தள்ளப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்று தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.
இதையும் படிங்க: முழுமையாகாத கூட்டணி?! தொகுதி பங்கீடு இழுபறி!? தலையை பிய்த்துக் கொள்ளும் திமுக - அதிமுக - தவெக!!
இதுதவிர, வணிக ரீதியான பயணங்களுக்கு வெள்ளை நம்பர் பிளேட் கொண்ட தனியார் வாகனங்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும், ஓட்டுநர்களுக்கு சமூக பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதம், வேலை நிலை பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு தொழிற்சங்கங்கள் விரிவான கடிதம் அனுப்பியுள்ளன. கடிதத்தில், “தனியார் நிறுவனங்கள் கட்டணத்தை தனக்கு விருப்பம்போல குறைப்பதால் ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அரசு உடனடியாக தலையிட்டு கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஓலா, உபர், ரேபிடோ பைக் டாக்சி சேவைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் அதிகம் இருப்பதால், நாளை நடைபெறும் வேலைநிறுத்தம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.
தொழிற்சங்கங்கள் தரப்பில், “பல ஆண்டுகளாக கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இனி காத்திருக்க முடியாது. அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் மேலும் தீவிரமடையும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பல மாநிலங்களில் சிறு அளவிலான போராட்டங்கள் நடந்தாலும், இம்முறை நாடு முழுவதும் ஒரே நாளில் நடைபெறும் வேலைநிறுத்தம் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வேலைநிறுத்தம் அரசின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் மற்றும் பயணிகளின் வசதி ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: 'புராஜெக்ட் வால்ட்': பாக்.,-ல் 13 பில்லியன் டாலர் முதலீடு..!! அதிரடி முடிவெடுத்த அமெரிக்கா..!!