புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலத்தைப் போலி ஆவணங்கள் தயாரித்துத் தனியார் நபர்களுக்குப் பத்திரப்பதிவு செய்த அதிர்ச்சி வழக்கில், தலைமறைவாக இருந்து வந்த முக்கிய இடைத்தரகரான பத்திர எழுத்தாளர் ஜெயபிரகாஷ் இன்று திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் அதிரடியாகச் சரணடைந்துள்ளார்.
பழனி அடிவாரம் பகுதியில் கோயில் பக்தர்களின் வாகனப் நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த அதிமதிப்பு வாய்ந்த நிலத்தைப் போலிப் பத்திரங்கள் மூலம் விற்பனை செய்ய இடைத்தரகராகவும், ஆவணத் தயாரிப்பாளராகவும் ஜெயபிரகாஷ் செயல்பட்டு வந்துள்ளார். இந்த மோசடி விவகாரத்தில் முறைகேடானப் பதிவுக்குத் துணையாக இருந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்த நிலையில், அவரை கொடைக்கானல் மலைப் பகுதியில் வைத்துச் சிபிசிஐடி தனிப்படை போலீசார் நேற்றைய தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சார்பதிவாளர் ஜஸ்டின் கைதைத் தொடர்ந்து, ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஜெயபிரகாஷின் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டதுடன், அவரது மனைவி செண்பகமதி உட்பட 8 பேரைக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். போலீசாரின் இந்த அதிரடி வளையத்தால் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்ட ஜெயபிரகாஷ், இன்று வழக்கறிஞர்களுடன் நேரில் வந்து சிபிசிஐடி அதிகாரிகளிடம் தஞ்சமடைந்தார்.
இதையும் படிங்க: "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை!" - திருவண்ணாமலையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!
ஏற்கனவே இந்த வழக்கில் நிலத்தை விற்ற ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி மற்றும் வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகிய 4 பேரை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது சரணடைந்துள்ள ஜெயபிரகாஷிடம் நடத்தப்படும் தீவிர விசாரணையின் மூலம் இந்த மாபெரும் கோயில் நில மோசடிப் பின்னணியில் உள்ள உயர் பொறுப்பாளர்கள் மற்றும் பிற முக்கியப் புள்ளிகள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு! முதலமைச்சர் விஜய் உத்தரவு!