கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றிய மத்திய அரசின் முடிவு, மலையாளி சகோதர சகோதரிகளுக்கு மகிழ்ச்சியான தருணம் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். கொச்சியில் அகில கேரள தீவார சபையின் தங்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்த மாற்றம் மலையாள கலாச்சாரத்துக்கு ஏற்ற சரியான பெயரை மாநிலத்துக்கு வழங்கியுள்ளது என்று கூறினார்.
பிரதமர் மோடி தனது உரையில், “மக்களே நீங்கள்தான் என் கடவுள். கேரளாவை கேரளம் என்று மாற்ற வேண்டும் என்ற உங்கள் நீண்டகால விருப்பத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிறைவேற்றியுள்ளது.
இந்த அழகிய மாநிலத்துக்கு இப்போது சரியான பெயர் கிடைத்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று உருக்கமாகப் பேசினார். கேரள சட்டப்பேரவை 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை அடுத்து, மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அடுத்த பத்தாண்டுக்கு இதான் டார்கெட்!! வளர்ச்சி திட்டங்கள் என்னென்ன? பிரதமர் மோடி அறிவிப்பு!
மீனவர் சமூகத்தினரின் பங்களிப்பை பிரதமர் மோடி பாராட்டினார். 2018ஆம் ஆண்டு கேரள வெள்ளத்தின்போது, தங்கள் உயிரை பணயம் வைத்து பல உயிர்களை காப்பாற்றிய மீனவர்களின் துணிச்சல் உலகறிய உண்மை என்றார்.

நாடு சவால்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் மீனவ சமூகத்தின் அர்ப்பணிப்பு பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டார். முந்தைய ஆட்சிகளில் மீனவர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போதைய NDA அரசு அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
மீன்வளத் துறையை வலுப்படுத்தும் வகையில், தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் (National Fisheries Digital Platform) தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனவர்கள், வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் ஒரே இணையதளத்தில் பதிவு செய்து, அரசு திட்டங்களின் பலன்களை எளிதாகப் பெற முடியும். வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கு இது அடித்தளமாக அமையும் என்றும், ஒவ்வொரு கேரள குடும்பமும் செழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதாகவும் மோடி விளக்கினார்.
பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் கேரளத்துக்கு ரூ.1400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது, இதனால் துறை வேகமாக முன்னேறி வருகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மீனவ சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி மூலம் மாநிலமும் நாடும் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சி கேரளத்தில் மீனவர் நலன் மற்றும் கலாச்சார அடையாளத்தை மையமாகக் கொண்டு நடைபெற்றது. பெயர் மாற்றம் மற்றும் மீனவர் திட்டங்கள் மூலம் NDA அரசின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது என்று பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஹலோ நெதன்யாகு!! போர் நிறுத்தம் உடனே வேணும்!! இஸ்ரேல் பிரதமரிடம் மோடி போனில் வலியுறுத்தல்!