தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சேலத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசிய ஒரு வார்த்தை திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேமலதா பேசுகையில், “தமிழ்நாடு முழுக்க ஒரே குற்றச்சாட்டுதான் அண்ணன் மேல் இருக்கு. எங்கே பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதை கலாசாரம் இருக்கு. இதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?” என்று வெளிப்படையாகக் கூறினார்.
அவர் மேலும், “இன்றைக்கு சகோதரியாக இந்த கூட்டணியில் அண்ணனுக்கு வலது கரமாக இணைந்து இருக்கிறேன். ஜான்சி ராணியாக... எங்கேயாவது பெண்களுக்கு ஏதாவது என்றால் அண்ணனிடம் உரிமையாகப் பேசுவேன்” என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வலிச்சாலும் பொறுத்துக்கோங்க!! வீண் வம்புக்கு போகாதீங்க!! கடுப்பேற்றும் கூட்டணி கட்சிகள்! திருமா கறார் கட்டளை!
பெண்கள் சக்தியைப் பாராட்டிய பிரேமலதா, “பெண்கள் என்றாலே சக்திக்கு இணையானவர்கள். வீட்டில் துர்கா, வேலு நாச்சியாராக மாறுவோம். தமிழகத்துக்கு அச்சுறுத்தல் வந்தால் ஒட்டுமொத்த பெண் சக்தியும் ஒன்று திரண்டு அண்ணனுக்கும், இந்த ஆட்சிக்கும் துணை நிற்போம்” என்று உணர்ச்சிப் பூர்வமாகப் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் பலரும் உடன் இருந்தனர். பிரேமலதாவின் இந்தப் பேச்சு திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிலர் “வாய் தவறி பேசிவிட்டார்” என்றும், சிலர் “வேண்டுமென்றே பேசினார்” என்றும் கருத்து தெரிவித்தனர்.
இணையத்தில் இந்தப் பேச்சு வைரலாகப் பரவி, பலரும் கேலி, கிண்டல் செய்யும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். “அண்ணன் மேல் ஒரே குற்றச்சாட்டு பாலியல் வன்கொடுமை என்று சொன்ன பிறகு, எப்படி அவருக்கு வலது கரமாக இருக்க முடியும்?” என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பிரேமலதாவின் பேச்சு திமுக - தேமுதிக கூட்டணிக்குள் சிறிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பிரேமலதா தொடர்ந்து “அண்ணன்” என்று ஸ்டாலினை அழைத்து, ஆட்சியை புகழ்ந்து பேசியதால், அவரது உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் விவாதம் எழுந்துள்ளது.
தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணிக் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவரின் இத்தகைய பேச்சு, திமுகவுக்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: பத்து வருஷமா நீங்க தானே எம்.எல்.ஏ?! உங்ககிட்ட கேப்போம்! திண்டுக்கல் சீனிவாசனை சுத்துப்போட்ட மக்கள்!