மனைவிக்கு தெரியாமல் மண்ணுக்குள் புதைத்த ரூ.5 லட்சம்... ஓராண்டுக்கு பிறகு நடந்த அதிர்ச்சி!
ராஜஸ்தானில் மனைவிக்கு தெரியாமல் நிலத்தில் புதைத்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை, ஓராண்டுக்குப் பிறகு விவசாயி மீட்டுள்ளார். ஆனால், அதற்குள் கறையான்கள் ரூபாய் நோட்டுகளை அரித்துவிட்டதால், அந்தப் பணத்தைப் பார்த்து விவசாயி கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பலோத்ரா மாவட்டம் பச்பத்ரா பகுதியைச் சேர்ந்தவர் மங்கிலால் மேக்வால். விவசாயியான இவர், கடந்த ஆண்டு தனது நிலத்தை சுமார் ரூ.5 லட்சத்திற்கு விற்றதாக கூறப்படுகிறது. அந்தப் பணத்தை பயன்படுத்தி விவசாய நிலத்தில் ஒரு அறை கட்ட அவர் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், பணத்தை வீட்டில் வைத்திருந்தால் மனைவிக்கு தெரிந்துவிடும் என்ற அச்சத்தில், ரூ.5 லட்சத்தையும் பாலிதின் கவரில் போட்டு நிலத்தில் குழி தோண்டி புதைத்து வைத்ததாக கூறப்படுகிறது. மங்கிலாலுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்த நிலையில், நாளடைவில் பணத்தை புதைத்த இடமே அவருக்கு மறந்துவிட்டதாக தெரிகிறது.
இதையும் படிங்க: பல கோடி ரூபாய் ஹெராயின், 11 வெளிநாட்டு ஆயுதங்கள்! ட்ரோன் மூலம் கடத்திய பாக்.,! இந்திய எல்லையில் முறியடிக்கப்பட்ட சதி!

பின்னர் அறை கட்ட பணம் தேவைப்பட்டபோது, புதைத்து வைத்த பணத்தை தேடி விவசாய நிலம் முழுவதும் சோதனை செய்துள்ளார். சுமார் 6 ஏக்கர் நிலத்தில் பல இடங்களில் தேடியும் பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து, மனைவி மற்றும் மகனிடம் நடந்த விஷயத்தை தெரிவித்துள்ளார். முதலில் அவர்கள் நம்பவில்லை என்றாலும், பின்னர் குடும்பத்தினரும் சேர்ந்து பணத்தை தேடியுள்ளனர்.
இந்நிலையில், ஓராண்டுக்கு பிறகு மழை பெய்ததைத் தொடர்ந்து நிலத்தை விவசாயத்திற்கு தயார்படுத்த டிராக்டர் மூலம் உழுதுள்ளனர். அப்போது மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த பணம் கிடைத்துள்ளது.
ஆனால், குடும்பத்தினருக்கு காத்திருந்தது மற்றொரு அதிர்ச்சி. பாலிதின் கவருக்குள் இருந்த ரூ.500 நோட்டுகளில் பெரும்பாலானவை கறையான்களால் கடுமையாக சேதமடைந்திருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த மங்கிலால், பணத்தை எடுத்துக்கொண்டு பச்பத்ராவில் உள்ள வங்கிக்கு சென்றுள்ளார்.
சேதமடைந்த நோட்டுகளை மாற்ற வங்கி நிர்வாகம் மறுத்ததாகவும், இதற்காக ஜெய்ப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தை அணுகுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஓராண்டு தேடியும் கிடைக்காமல், கடைசியில் கையில் கிடைத்த பணம் இப்படி சேதமடைந்ததை பார்த்த மங்கிலால் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அவரது குடும்பமும் பணம் மீண்டும் கிடைக்குமா என்ற கவலையில் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை பார்த்து விவசாயி கண்ணீர் விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பணத்தை பாதுகாக்கும் முயற்சியில், மண்ணுக்குள் புதைத்த ரூ.5 லட்சம் இறுதியில் இப்படியொரு நிலைக்கு சென்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒரு வாரத்தில் நல்ல முடிவு வரும்! அமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பின் விவசாய சங்கத் தலைவர்கள் நம்பிக்கை!