சென்னை: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நடைபெற்றபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) கேவி குப்பம் தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் விசிக தலைவர் தொல். திருமாவளவன் அதை ஏற்க மறுத்தார். இது ஏமாளித்தனமா அல்லது அரசியல் தெளிவா என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் தேர்தல் பிரசாரத்தில் விளக்கமளித்துள்ளார்.
திருமாவளவன் பேசுகையில், “தொகுதி பங்கீடின்போது கேவி குப்பம் (வேலூர் மாவட்டம்) விசிகவுக்கு தரப்படும் என்று முடிவானது. அங்கு அதிமுக கூட்டணியில் மற்றொரு தலித் தலைவர் போட்டியிடுகிறார். இரு தலித் அமைப்புகள் ஒரே தொகுதியில் நேருக்கு நேர் மோதுவது நாகரிகமற்ற செயல். அதனால் ‘தொகுதி கொடுப்பதில் மகிழ்ச்சி, வெற்றி வாய்ப்பும் உள்ளது. ஆனால் வேண்டாம், வேறு தொகுதி கொடுங்கள்’ என்று திமுக நிர்வாகிகளிடம் கூறினேன்” என்றார்.
இந்த முடிவு குறித்து “இது ஏமாளித்தனமா? அல்லது அரசியல் தெளிவா? நீங்களே புரிந்துகொள்ளுங்கள்” என்று திருமாவளவன் சொன்னது, திமுக கூட்டணியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சென்னை திரு.வி.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பொற்கொடியை (ஆம்ஸ்ட்ராங் மனைவி) வரவேற்று திருமாவளவன் பேட்டி அளித்ததும் பெரும் பேசுபொருளானது.
இதையும் படிங்க: களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

கேவி குப்பம் தொகுதியில் தற்போது திமுக சார்பில் ராஜேஸ்வரி போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கியுள்ளார்.
திருமாவளவனின் இந்தப் பேச்சு, தலித் அரசியலில் ஒற்றுமை மற்றும் நாகரிகத்தை வலியுறுத்துவதாக விசிக தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் திமுகவினர் மத்தியில் இது அதிருப்தியை அதிகரித்துள்ளது. கூட்டணி பங்கீட்டின்போது தலித் தலைவரை எதிர்த்து போட்டியிட மாட்டோம் என்று கூறியதை, இப்போது பிரசார மேடையில் வலியுறுத்துவது கூட்டணிக்குள் சிறிய விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றனர்.
திருமாவளவனின் இந்த அரசியல் நகர்வு, தலித் வாக்குகளின் ஒற்றுமையை பாதுகாக்கும் நோக்கம் கொண்டதா அல்லது வேறு கணக்குகள் உள்ளதா என்பது தேர்தல் களத்தில் விவாதமாகியுள்ளது. விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட 8 தொகுதிகளில் இந்த முடிவு எப்படி பாதிக்கும் என்பதை அடுத்த சில நாட்களில் தெரியவரும்.
இதையும் படிங்க: துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா? - தேர்தலில் பின்வாங்கியதற்கு காரணம் இதுதான்... திருமா பரபரப்பு விளக்கம்...!