குஜராத்தின் ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து 242 பேருடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நிமிடத்தில் கட்டடத்தில் விழுந்து நொறுங்கியது. அரசு டாக்டர்கள், மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் விமானம் விழுந்ததில், அதில் தங்கியிருந்த 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
விமானத்தில் பயணித்த ஒருவர் தவிர, பயணிகள், பணியாளர்கள் உட்பட 241 பேரும் இறந்தனர். விழுந்து நொறுங்கிய விமானம் தீப்பிடித்து எரிந்ததால், பலரது உடல்கள் கருகின. இந்த விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இறந்தார்.

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா நிறுவன விமானம், இப்போது டாடா குழுமத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: விமான விபத்துல செத்தவங்கள இப்படியுமா பேசுவீங்க! கேரள நர்ஸை விமர்சித்த துணை தாசில்தாருக்கு காப்பு..!
விமானத்தின் இரு இன்ஜின்களும் செயல் இழந்தன, பறவை மோதியது, எரிபொருள் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டது என யூகத்தின் அடிப்படையில் விபத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

இதற்கிடையே இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அவர்களின் உறவினர்களின் டிஎன்ஏ மூலம் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. மேலும் விமானத்தில் இருந்த கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அடுத்த கட்ட ஆய்வுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

விமானத்தின் பாகங்கள் நொறுங்கிக் கிடக்கும் பகுதியில், சிதறிக் கிடக்கும் பொருட்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதே போல், இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்காக, அவர்களின் உறவினர்களிடம் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டு வருகின்றன. டிஎன்ஏ சாம்பிள் தருவதற்காக பிஜி அரசு மருத்துவமனைக்கு வருவோர் கதறி அழுவதால், ஆமதாபாத் நகரமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
பெறப்பட்ட டிஎன்ஏ மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தி, 48 மணி நேரத்திற்கு பின் முடிவுகள் வெளியாகும். அனைவரின் டிஎன்ஏ மாதிரி முடிவுகளும் பெறப்பட்ட பிறகே முடிவுகள் அறிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில், இறந்தவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது
இதையும் படிங்க: செத்துட்டேன்னு தான் நினைச்சேன்! உயிர் பிழைச்சதை நம்ப முடியல! மவுனம் கலைத்தார் விபத்தில் தப்பிய விஸ்வாஸ் குமார்..