தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்முறையாகப் பேசும் உறுப்பினர்களின் உரையை கன்னிப் பேச்சு என்று அழைக்காமல், அறிமுக உரை அல்லது முதல் உரை என்று நாகரிகமாக அழைக்க வேண்டும் என்ற தனது நீண்டநாள் கோரிக்கையைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் வழிமொழிந்து பேசியதற்கு பாஜக தேசிய மகளிரணித் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நெகிழ்ச்சியுடன் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், கடந்த 2021-ஆம் ஆண்டு தாம் கோவை தெற்கு தொகுதியிலிருந்து முதல்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்துள்ளார்.

அப்போது அவையில் பேசிய பலரும் தங்களது முதல் உரையை 'கன்னிப் பேச்சு' என்று குறிப்பிட்டதாகவும், கன்னி என்ற சொல் இளம் வயதுப் பெண்ணைக் குறிக்கும் சொல்லாக இருப்பதால், சட்டப்பேரவையில் முதல் உரையை நிகழ்த்துவதை அறிமுகப் பேச்சு அல்லது முதல் பேச்சு என்று குறிப்பிடுவதே கண்ணியமாகவும் நாகரிகமாகவும் இருக்கும் என அன்றைய சபாநாயகரிடம் சுட்டிக்காட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசிலும் அதே சொல் புழக்கத்தில் இருந்ததால், இதனை மாற்றி அறிவிக்குமாறு அண்மையில் தாம் விடுத்த கோரிக்கை பரவலான வரவேற்பைப் பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு குட் நியூஸ்..! ரூ. 20 லட்சம் பிணையில்லா கடன்.. விஜய் அரசின் மெகா அறிவிப்புகள்..!!
இந்நிலையில், இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பாமக சட்டமன்றக் கட்சித் தலைவர் சௌமியா அன்புமணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் லதா ஆகியோர், அவையில் கன்னிப் பேச்சு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்குத் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இதற்கு உடனடியாகப் பதிலளித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், கடந்த சட்டமன்றத்தில் வானதி சீனிவாசன் இந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக அறிமுக உரை என்று அழைக்கலாம் என்றும் ஆலோசனைக் கூறியிருந்தார்; எனவே சட்டப்பேரவைத் தலைவர் இதனைப் பரிசீலித்து நடைமுறைக்குக் கொண்டுவர ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என அவையில் தனது முழு ஆதரவைத் தெரிவித்தார்.
தனது நியாயமான கோரிக்கையை ஏற்றுச் சட்டமன்றத்தில் வழிமொழிந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கும், இதற்காகக் குரல் கொடுத்த பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ள வானதி சீனிவாசன், இனி வரும் காலங்களில் சட்டமன்றத்தில் பேசும் எந்தவொரு உறுப்பினரும் 'கன்னிப் பேச்சு' என்ற சொல்லைத் தவிர்த்து, அறிமுக உரை அல்லது முதல் உரை என்றே பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கடந்த ஆட்சியில் லஞ்சம் வாங்கினார்கள்..! நானே சாட்சி..! பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு..!!