திமுக ஆட்சி காலத்தில் 2021 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு வீட்டில் இன்று காலையிலேயே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளர், திமுக எம்எல்ஏக்களின் சட்டசபை கொறடாவாகவும் இருந்து வருகிறார். திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவருமான எ.வ.வேலுவின் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திலும் திருவண்ணாமலை வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.

மேலும் திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எ.வ.வேலு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது பணி நியமனம் செய்வதில் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியது.
இதையும் படிங்க: அதிமுக எங்க பங்காளி.. பாஜக பகையாளி..!! அதிமுகவுடன் திமுக கூட்டணி வெச்சா என்ன தப்பு?? ஆர்.எஸ்.பாரதி அதிரடி..!!
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி செய்தியாளர்களிடம் பேசினார். சட்டமன்றத்தில் முதல்வரிடம் எ.வ.வேலு நேருக்கு நேர் கேள்வி எழுப்பினார் என்றும் மறுநாளே ரெய்ட் வந்திருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார். இதெல்லாம் பார்த்துப் பார்த்து அலுத்துப்போன விஷயம் என்றும் அவர் தெரிவித்தார். எங்கள் வீட்டிற்கு ரெய்ட் செய்ய வந்தவர்களுக்கு சீட் கொடுத்து அமைச்சராக ஆக்கவில்லை என்று தெரிவித்துள்ள அவர், அந்த கேவலமான காரியத்தை திமுக செய்ததில்லை எனவும் கூறினார்.
இதையும் படிங்க: "ஜனவரி 1 முதல் அரை மீசை பாரதி..." ... சிரித்துக்கொண்ட ஆர்.எஸ். பாரதியை கலாய்த்த மாணிக்கம் தாகூர்...!