தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியைப் பிடித்து மூன்று மாதங்கள் நிறைவடைந்த நிலையில், சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் விவாதம் கடுமையான மோதலாக மாறியுள்ளது. தவெக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையேயான வாக்குவாதம் பட்ஜெட் விவரங்களைத் தாண்டி தனிப்பட்ட விமர்சனங்களாகவும், மொழி உச்சரிப்பு தொடர்பான சர்ச்சையாகவும் உருவெடுத்துள்ளது.
இந்தச் சூழலில் நிதியமைச்சர் மரிய வில்சனுக்கும் கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரனுக்கும் இடையே தமிழ் உச்சரிப்பு குறித்து கடும் விவாதம் நடந்தது. எம்எல்ஏ ராஜேந்திரன், அமைச்சர் தமிழை அழகாக உச்சரிக்க வேண்டும் என ஆதங்கத்துடன் கேட்டார். இது இயல்பான கோரிக்கையாக இருந்தபோதிலும், நிதியமைச்சர் மரிய வில்சன் கடும் கோபத்துடன் பதிலளித்தார். சபாநாயகர் பிரபாகர் இதை லைட்டர் சென்ஸாக எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியும், அமைச்சர் மைக்கை தட்டி கோபத்தை வெளிப்படுத்தினார். இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் வெளியிட்ட வீடியோவில் மரிய வில்சனின் நடத்தை குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்தப் பிரச்சினையை இங்கேயே விட்டுவிடக் கூடாது. மரிய வில்சனை அமைச்சரவையிலிருந்து நீக்கும் வரை தொடர்ந்து போராட வேண்டும். அவரது ஆணவம் அளவுக்கு மீறிச் சென்றுள்ளது. எம்எல்ஏ ராஜேந்திரன் தவறாகப் பேசவில்லை; வெறும் ஆதங்கத்தில் தமிழை அழகாக உச்சரிக்கச் சொன்னார். ஆனால் அமைச்சர் ரவுடி போல நடந்துகொண்டார்” என்று அவர் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

சவுக்கு சங்கரின் வீடியோவில் பங்கேற்ற மாலதி, “எல்லாரும் மனிதர்கள்தானே. நிதானம் இழப்பது இயல்புதானே” எனக் கேட்டபோது, சங்கர் உறுதியாகப் பதிலளித்தார். “அமைச்சர்கள் நிதானத்தை இழக்கக் கூடாது. நிதானமிழந்தவர்கள் அமைச்சரவையில் இருக்கத் தகுதியற்றவர்கள். அவர் யாரையும் அவமானப்படுத்தவில்லை. சபாநாயகர் அறிவுறுத்தியும் கேட்காமல் மைக்கை தட்டியது அவரது இயல்பான குணத்தைக் காட்டுகிறது.
வீட்டில் சகோதரருடன் சண்டை வந்தால் யாரும் கட்டையை எடுத்து அடிக்கச் செல்வதில்லை. அறிவுடன் அடங்கி நடப்பவர்களே பாராட்டுக்குரியவர்கள். கலைஞர் கருணாநிதி கூறியபடி, ‘செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்’ என்ற நெறிமுறையை மரிய வில்சன் பின்பற்றவில்லை. அவர் ஆணவத்தை மட்டும் வளர்த்துக்கொண்டிருக்கிறார்” எனச் சவுக்கு சங்கர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தவெக அரசின் மூன்று மாத ஆட்சி அனுபவத்தை மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அமைச்சரின் நடத்தை குறித்த விமர்சனங்கள் தொடரும் நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே இந்த விவகாரம் மேலும் விவாதத்திற்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மன்னிப்பு கேளுங்க மரிய வில்சன்... இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆவேசம்...!