செங்கோட்டையன் குறித்து கோபிச்செட்டிபாளையத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அடுக்கடுக்கான காட்டமான குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்த நிலையில், இதற்கு பதிலளித்துள்ள கே.ஏ.செங்கோட்டையன், அரசியல் நாகரீகம் இன்றி பேசும் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச ஆரம்பித்தால் அவர் தாங்க மாட்டார், வீதியில் அவரால் நடமாட முடியாது என பதில் அளித்துள்ளார் காலம் அவருக்கு பதில் சொல்லும் என்றும் கூறியுள்ளார்.
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சண்முகனை ஆதரித்து அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே ஏ செங்கோட்டையன் ஆனைக்கல் பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்திய நாடே வியக்கத்தக்க வகையில் மாற்றங்களை உருவாக்கக்கூடிய தேர்தல் இது. எம்ஜிஆர்,ஜெ பிறகு மாற்றத்தை மக்கள் விரும்பகின்றனர்.
என்னால் உருவாக்கப்பட்டவர்கள் ஒரே நிமிடத்தில் என்னை தூக்கி எறிந்த போது, என்னை தாங்கி பிடித்தவர் விஜய். ஒரு நல்ல மனிதர் இடத்தில் நான் சென்று இருக்கின்றேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எட்டு ஆண்டுகள் துன்பம் அனுபவித்தேன். ஒரே நிமிடத்தில் என்னை தூக்கி எறிந்த போது மூன்று நாட்கள் நான் தூங்கவில்லை.ஏன் இந்த நிலை என எண்ணிப் பார்த்தேன். இன்று ஒரு நல்ல தலைமையில் இணைந்து இருக்கின்றேn. இதனால் 20 வயது எனக்கு குறைந்ததை போல் எண்ணுகிறேன்.
இதையும் படிங்க: செங்கோட்டையனுக்கு திமிரு.. அகங்காரம்..!! பரப்புரையில் பந்தாடிய EPS..!
நல்லவரிடத்தில் சேர்ந்து இருக்கின்றேன் நன்றாக தூக்கம் வருகிறது. எப்போது முதுகில் குத்துவார்கள் என எண்ணிக்கொண்டு தூங்காமல் இருக்கத் தேவையில்லை. 10 முறை தோற்ற பழனிச்சாமி இந்த தேர்தலில் போட்டியிடுகின்றார். அந்த கூட்டணியில் போடுகின்ற ஓட்டு நோட்டாவுக்கு சமம். வெற்றியாக மாறாது. விஜய் மட்டுமே வெற்றி பெறுவார். 23ஆம் தேதி வீட்டில் உள்ள குழந்தைகள் ஒவ்வொருவரும் பெற்றோர்கள் விஜய்க்கு ஓட்டு போட்டால் தான் சாப்பிடுவேன் என சொல்லி அவர்களை ஓட்டு போட வைக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் காட்டமான விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், எடப்பாடியை பொறுத்தவரை துரோகத்திற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றால் அவருக்குத்தான் வழங்க வேண்டும்.. இந்தியாவில் துரோகத்திற்கு ஒருவருக்கு தான் நோபல் பரிசு என்றால் அவருக்குத்தான் கொடுக்க வேண்டும். அவர் தகுதியை விட்டு இது போன்ற பேச்சுக்கள் பேசியிருக்கின்றார்.. இது வேதனை தரக்கூடிய ஒன்று. இதனை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். அவருக்கு இது புரியாது. அவர் தகுதி என்பது எவ்வளவு கோபத்தோடு உரையாற்றி இருக்கிறார் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவரைப் பற்றி இதற்கு மேல் சொல்வது சரியாக இருக்காது. காலம்தான் அவருக்கு பதில் சொல்லும். நாளைய தீர்ப்பு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தான் முதலமைச்சர் ஆக வருவார். வீதியில் அவர்தான் நடமாட முடியாது. அவரைப்பற்றி பேச வேண்டும் என்றால், 1972 இல் ஆரம்பித்தால் அவர் தாங்க மாட்டார். அவர் எப்படி என்னிடத்தில் வந்தார், எந்த வகையில் நின்றார், எங்கெங்கே என்னென்ன செய்தார் என்பதையெல்லாம் சொல்லத் தேவையில்லை. சொல்ல வேண்டிய தேவையை சூழ்நிலையை உருவாக்கினால் தாங்க மாட்டார். மக்கள் புரிந்து கொள்வார்கள்.
நான் இல்லை என்றால் அவர் முதலமைச்சராகவே ஆகியிருக்க முடியாது. நாங்கள் ஆதரிக்கவில்லை என்றால் முதலமைச்சராக இருக்க முடியாது. முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்தவன். நான் என்னிடத்தில் எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள் என்பது அவருக்கு தெரியும். இதையெல்லாம் புரிந்துகொண்டு அவர் பேச வேண்டும். நாங்கள் ஆதரிக்கவில்லை, கையெழுத்து போடவில்லை என்றால் முதலமைச்சராகி இருக்க முடியாது. அதனை புரிந்து கொண்டு பேச வேண்டும். அவ்வளவுதான் அவரது அரசியல் நாகரீகம் என பதில் அளித்தார்.
இதையும் படிங்க: விடியும் வரை நான்தான் முதலமைச்சர்! விடிஞ்சதும் எல்லாம் மாறிடுச்சு! இபிஎஸ் குறித்து செங்கோட்டையன் பகீர்..!!