கொழும்பு: பல ஆண்டுகளாக தமிழகத்தில் அகதிகளாக வசித்து வரும் இலங்கை தமிழர்கள், மீண்டும் தாயகம் திரும்புவதற்கான நடைமுறைகளை இலங்கை அரசு எளிமைப்படுத்தியுள்ளது.
முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியா வந்தவர்களுக்கும் சில நிபந்தனைகளுடன் இலங்கைக்குள் திரும்ப அனுமதி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழகத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
இலங்கையில் 1983-ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது. இதனால் ஏராளமான இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு தேடி தமிழகத்திற்கு அகதிகளாக வந்தனர்.
இதையும் படிங்க: மேகதாது அணை! தமிழகம்-கர்நாடகா தண்ணீர் பிரச்சினை! சென்னையில் டி.கே.சிவக்குமார் பதில்!
கடந்த 2002 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் சுமார் 18 ஆயிரம் பேர் மட்டுமே மீண்டும் இலங்கை திரும்பியுள்ளனர். தற்போது தமிழகத்தில் சுமார் 90 ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் சொந்த நாட்டுக்கு திரும்ப விரும்புபவர்களுக்கு நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் இலங்கை அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அந்நாட்டு பார்லிமென்ட்டில் அகதிகள் விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பொதுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த புதிய நடைமுறைகளை விளக்கியுள்ளார்.

அதன்படி, இந்தியாவில் இருந்து தன்னார்வமாக இலங்கை திரும்ப விரும்பும் அகதிகள், சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அணுகி தங்களது விருப்பத்தை பதிவு செய்யலாம். 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு முன் பாஸ்போர்ட் இல்லாமல் இலங்கையை விட்டு வெளியேறியவர்கள், அந்நாட்டு மாநில புலனாய்வுப் பிரிவின் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
கொலை, தேசத்துரோகம் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் இல்லாதவர்கள், தற்காலிக பாஸ்போர்ட் மூலம் இலங்கைக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையங்கள் அல்லது துறைமுகங்கள் வழியாக நாட்டுக்குள் செல்லலாம்.
மேலும், இவ்வாறு நாடு திரும்பும் அகதிகள் மீது இலங்கையின் குடியேற்றச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக தமிழகத்தில் வசித்து வரும் இலங்கை தமிழர்களில் தாயகம் திரும்ப விரும்புவோருக்கு, இந்த அறிவிப்பு புதிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பருவமழை மழை வருவதற்கு முன்பே முதல்வர் விஜய் அதிரடி! தமிழக அரசின் மாஸ்டர் பிளான்!