சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பதவிக்கு புதிய முகத்தை நியமிக்க வேண்டும் என அமைச்சர்கள் விஸ்வநாதன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் டெல்லி தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது மகன் கார்த்தி சிதம்பரம் அல்லது கடலூர் எம்.பி. விஷ்ணுபிரசாத் ஆகியோரில் ஒருவரை தலைவராக்க வேண்டும் என முயற்சி மேற்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகை சமீபத்தில் பெங்களூரில் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தபோது, தனது பதவியிலிருந்து விலகிக் கொள்ளத் தயார் என தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட கார்கே, புதிய தலைவர் தேர்வு குறித்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவசரமாக டெல்லி சென்ற அமைச்சர்கள் விஸ்வநாதன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் கார்கேவை நேரில் சந்தித்து பேசினர். அவர்கள், செல்வப்பெருந்தகையை மாற்றிவிட்டு, மாணிக்கம் தாகூர் எம்.பி.யை மாநிலத் தலைவராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளையில், சிதம்பரம் தரப்பு செல்வப்பெருந்தகையே தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என கார்கேவிடம் வலியுறுத்தியுள்ளது. ஒருவேளை மாற்ற வேண்டுமானால், கார்த்தி சிதம்பரம் அல்லது விஷ்ணுபிரசாத் ஆகியோரில் ஒருவருக்கு பதவி வழங்க வேண்டும் என சிதம்பரம் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டால், அவர் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணையலாம் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. தமிழக காங்கிரஸில் இப்போது பலம் பரீட்சை நிலவும் சூழலில், டெல்லி தலைமை எந்த முடிவை எடுக்கப் போகிறது என்பதை நோக்கி கட்சி நிர்வாகிகள் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் இந்தத் தலைவர் தேர்வில் அடங்கியுள்ளது என்பதால், இந்த உட்கட்சி அதிகாரப் போட்டி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அடுத்த சில நாட்களில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அல்வா மாதிரி வந்த வாய்ப்பு வீண்! ராஜ்யசபா சீட் அம்போ! காங்., உட்கட்சி பூசலால் ராகுல்காந்தி அப்செட்!