தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர் மற்றும் விற்பவர்களுக்கு முக்கியமான மாற்றத்தை பதிவுத்துறை கொண்டு வந்துள்ளது. இனி சில வகையான வீடு, மனை விற்பனை பத்திரங்களை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பத்திரப்பதிவுக்கான வரிசை டோக்கன் பெற வேண்டிய அவசியமும் இருக்காது என பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
பதிவுத்துறையின் புதிய ‘ஸ்டார் 3.0’ மென்பொருள் மூலம் இந்த வசதி செயல்படுத்தப்படுகிறது. புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், மனைப்பிரிவுகளில் வீடு அல்லது மனை விற்பனை பத்திரங்கள் மட்டுமின்றி, வீட்டுக் கடனுக்கான ஆவண ஒப்படைப்பு அடமான பத்திரம் மற்றும் கடன் முடிவுக்கான ரசீது போன்ற ஆவணங்களையும் சார் பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பதிவு செய்ய முடியும்.
இந்த நடைமுறை ஆகஸ்ட் 17 முதல் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய விரல் ரேகை, கருவிழி, வெப் கேமரா போன்ற கருவிகள் வீட்டில் இருப்பது சாத்தியமில்லை என்பதால், வீடு அல்லது மனை விற்பனை செய்யும் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் நிறுவன அலுவலகங்களில் இப்பதிவு பணிகளை மேற்கொள்ளலாம்.
இதையும் படிங்க: கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்..! பேரவையில் அமைச்சர் ராஜீவ் விளக்கம்..!

புதிய முறையில் பத்திரப்பதிவு மொத்தம் ஐந்து கட்டங்களாக நடைபெறும். முதற்கட்டத்தில் வாங்குபவர் பதிவுத்துறை இணையதளத்தில் கணக்கு உருவாக்கி, பத்திர வகையை தேர்வு செய்து, சொத்தின் முந்தைய ஆவணங்கள், வாங்குபவர், விற்பவர், சாட்சிகள், சொத்து விவரங்கள், சர்வே எண், பரப்பளவு, எல்லைகள், விற்பனை மதிப்பு உள்ளிட்ட தகவல்களை பதிவேற்ற வேண்டும். இதன் அடிப்படையில் வரைவு பத்திரம் தானாக உருவாகும்.
அடுத்த கட்டத்தில் வரைவு பத்திரத்தை பதிவேற்றி, ஆதார் சரிபார்ப்பு, விரல் ரேகை, புகைப்படம், கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். மூன்றாம் கட்டத்தில் முத்திரைத் தீர்வை மற்றும் பதிவு கட்டணம் உள்ளிட்ட தொகைகளை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
நான்காம் கட்டத்தில் பத்திரத்தை பதிவு செய்ய விண்ணப்பதாரர் ஆன்லைனில் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பிறகு விண்ணப்பதாரரின் பணிகள் முடிவடையும்.
ஐந்தாம் கட்டத்தில் சார் பதிவாளர், பதிவேற்றம் செய்யப்பட்ட பத்திரம் மற்றும் இணை ஆவணங்களை 24 மணி நேரத்துக்குள் சரிபார்த்து, டிஜிட்டல் கையொப்பத்துடன் பதிவை முடிப்பார். பின்னர் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ஆன்லைனில் பெற முடியும்.
இந்த புதிய நடைமுறை தொடர்பான சந்தேகங்களுக்கு பதிவுத்துறை கட்டணமில்லா 1800 1025174 என்ற எண்ணில் உதவி வழங்குகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் வசிக்கும் 90,000 இலங்கை தமிழர்களுக்கு குட் நியூஸ்! நாடு திரும்ப புதிய சலுகை அறிவிப்பு