கோயில்களுக்கு சினிமா பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் வருகை தரும்போது கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. பக்தர்களின் தரிசனத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதுடன், கோயில்களின் புனிதத்தன்மை மற்றும் மரபு சார்ந்த ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து கோயில் நிர்வாகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்கள் கோயில்களுக்கு வரும்போது அவர்களுடன் வரும் நபர்களின் எண்ணிக்கை, கோயில் மற்றும் வருகை நேரம் உள்ளிட்ட முழு விவரங்களையும் முன்கூட்டியே அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு நாள் முன்பாகவோ அல்லது வருகை குறித்த தகவல் கிடைத்த உடனேயோ இந்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், முக்கிய பிரமுகர்கள் கோயிலுக்கு வருகை தரும்போது கோயில் வளாகத்திற்குள் புகைப்படம் மற்றும் காணொளி பதிவு செய்வதற்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என அறநிலையத்துறை ஆணையர் வினய் உத்தரவிட்டுள்ளார். இதனால் பிரபலங்களின் கோயில் வருகையின்போது நடைபெறும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவில் பக்தர்களுக்கு இனி புதிய வசதிகள்... முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு! என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?

அதேபோல், பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் நுழைவு மற்றும் கோயில் வளாகத்திற்குள் அவர்களின் இயக்கம் ஆகியவை முறையாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். இதன் காரணமாக வழக்கமாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்கூட்டியே அனுமதி பெற்றவர்கள் அல்லது பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக அவசியமான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே பிரபலங்களுடன் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல்கள் அனைத்து திருக்கோயில்களிலும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், செயல் அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித விதிவிலக்கும் இன்றி அவற்றை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் அறநிலையத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் கோயில் வருகையின்போதும் பக்தர்களுக்கு இதே நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பழனி பாணியில் திண்டுக்கல்லிலும் நிலம் மோசடி! கோவில் சொத்துக்களுக்கு குறி? புயலை கிளப்பிய விவகாரம்!