NEET 2026: மாணவர்களே..!! மன அழுத்தமா..?? கவலை வேண்டாம்.. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க..!!
நீட் தேர்வு நெருங்கும் நிலையில் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வு நெருங்கி வரும் வேளையில் மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க உதவும் வகையில் பிரத்யேக உதவி எண்களை தேசிய தேர்வு முகமை (NTA) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை மாணவர்களின் மனநலத்தை முன்னிலைப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. நீட் (NEET-UG) தேர்வுக்கு தயாராகும் லட்சக்கணக்கான மாணவர்கள் கடுமையான படிப்பு அழுத்தம், பதற்றம் மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவற்றால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இத்தகைய சூழலில், தேர்வு முடிவுகளைவிட மாணவர்களின் உயிரும் மனநலமும் மிக முக்கியம் என்பதை வலியுறுத்தி தேசிய தேர்வு முகமை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “நீட் தேர்வர்களே, உங்கள் மனநலமும் நல்வாழ்வும் எங்களுக்கு முதன்மையான முன்னுரிமை. எந்தத் தேர்வும் உங்கள் உயிரைவிட முக்கியமானதல்ல. மன அழுத்தம், பதற்றம் அல்லது அதிக மனச்சுமையை உணர்ந்தால் உடனடியாக உதவி நாடுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டெலி மனஸ் (Tele MANAS) என்ற தேசிய தொலை மனநல உதவி சேவையை NTA பரிந்துரை செய்துள்ளது. இது 24 மணி நேரமும் செயல்படும் இலவச சேவையாகும். மாணவர்கள் 14416 அல்லது 1-800-891-4416 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த சேவை இந்தியாவில் உள்ள 20க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. எனவே தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பேசி உதவி பெற முடியும்.
இதையும் படிங்க: இன்று முதல் வேலை நிறுத்தம்... தென் மாநிலங்கள் ஸ்தம்பிக்கும் அபாயம்... இனி கேஸ் சிலிண்டர்கள் கிடைக்காது...!
டெலி மனஸ் சேவையின் சிறப்பம்சங்கள்:
- முழு ரகசியத்தன்மை பேணப்படும் (Confidential)
- இலவசம் (Toll-free)
- தகுதி வாய்ந்த ஆலோசகர்கள் (Trained Counsellors) மூலம் உடனடி ஆலோசனை
- தேவைப்பட்டால் மேலும் உள்ளூர் மனநல சேவைகளுடன் இணைப்பு வழங்கப்படும்
தேர்வு அழுத்தம் காரணமாக தனிமை, கவலை, தூக்கமின்மை அல்லது விரக்தி போன்ற உணர்வுகளை மாணவர்கள் அனுபவிக்கலாம். இத்தகைய நேரங்களில் ஒருவரிடம் பேசுவது மிகுந்த நிம்மதியை அளிக்கும். “நீங்கள் தனியாக இல்லை. உதவி உடனடியாக கிடைக்கும். இன்றே ஒருவரிடம் பேசுங்கள். உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்” என்று NTA தன் அறிவிப்பில் மாணவர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களிடம் இந்த உதவி எண்களைப் பற்றி தெரிவித்து, தேவைப்படும் போது அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
தேர்வு ஒரு வாய்ப்பு மட்டுமே; ஆரோக்கியமான மனநிலையுடன் வாழ்வது தான் முக்கியம். மாணவர்கள் தினசரி உடற்பயிற்சி, சரியான உணவு, போதிய ஓய்வு மற்றும் நேர மேலாண்மை ஆகியவற்றின் மூலமும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். இந்த முயற்சி மாணவர்களிடையே மனநல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு நாள் நெருங்கும் நிலையில் இத்தகைய உதவிகள் பலரின் வாழ்க்கையை பாதுகாக்கும் என்று நம்பலாம்.
இதையும் படிங்க: மகளிருக்கு ஆண்டுதோறும் ரூ.36,000 வழங்கப்படும்... ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி...!