தமிழ்நாட்டில் இயங்கி வரக்கூடிய என்ரிக்கா என்டர்பிரைசஸ் நிறுவனத்தினுடைய 11 வகையான மதுபான பிராண்டுகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான எஃப்எஸ்எஸ்ஏஐ ஆய்வு மேற்கொண்டிருந்தது. அந்த ஆய்வின் அடிப்படையில், தடை உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 16 மணி நேரத்திற்குள் அதிரடியாக அந்தத் தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் அலுவலகத்தின் உத்தரவின்படி இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எஃப்எஸ்எஸ்ஏஐயின் சான்றிதழின்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதிகப்படியான சுவையூட்டி சேர்க்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில்தான் இந்த 11 வகையான மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், தடை விதிக்கப்பட்ட அடுத்த 16 மணி நேரத்திற்குள் அந்தத் தடை நீக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: செந்தில்பாலாஜி மீதான டாஸ்மாக் வழக்கு… “விசாரணைக்கு தடை கூடாது”.. தமிழக அரசு கடும் வாதம்..!!
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் கஜலட்சுமி ஐஏஎஸ் பெயரில் வெளியிடப்பட்டிருக்கக்கூடிய அந்த உத்தரவில், எஃப்எஸ்எஸ்ஏஐயினுடைய முந்தைய தடை உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எஃப்எஸ்எஸ்ஏஐ ஆய்வின் அடிப்படையில், சுகாதாரப் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே எந்தவிதமான முறையான கால அவகாசமும் இன்றி இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பது தற்போது பெரும் கேள்வியை எழுப்பியிருக்கிறது.
குறிப்பாக, பல்வேறு அடிப்படையில் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே நீக்கம் செய்யப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரின் அதிகார வரம்புகளைத் தாண்டியும் எஃப்எஸ்எஸ்ஏஐயின் பங்கும் மிக முக்கியமானது எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
குறிப்பாக, தரமற்ற அல்லது விதிகளை மீறிய உணவு மற்றும் பானங்களின் விற்பனையைத் தடுப்பதற்கு எஃப்எஸ்எஸ்ஏஐக்கு முழுமையான அதிகாரம் இருக்கிறது. அந்த அதிகாரத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில்தான் தரக்குறைபாடு காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அந்தத் தடை உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அதே உத்தரவிலேயே ஆறாவது கோட்பாட்டின்படி இந்தத் தடை உத்தரவு உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் எனவும், இந்தத் தடைநீக்க ஆணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில் புகாருக்குள்ளான மதுவை ஆய்வு செய்வதற்கு தமிழ்நாட்டில் ஆய்வகம் உள்ளதா? அந்த ஆய்வகத்தில் மாதிரி சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறதா? அப்படி சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், அந்தத் தடை ஆணையை நீக்குவதற்கான ஆணையோடு அந்த உத்தரவையும் வெளியிடாதது ஏன்? என பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன.
டாஸ்மாக் ஆணையர் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரின் வழிகாட்டுதலின்படியே எஃப்எஸ்எஸ்ஏஐயும் செயல்பட வேண்டும் என்பது அந்த அதிகார வரம்பிற்கானதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தச் சூழலில்தான், வெறும் கடிதப் பரிமாற்றங்கள் மூலம் மட்டுமே இல்லாமல், இந்தத் தடை உத்தரவு எதற்காக நீக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த வெளிப்படைத்தன்மை குறித்தும் பொதுவெளியில் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 11 மதுபான ரகங்களுக்கு திடீர் தடை..! TASMAC நிர்வாகம் அதிரடி உத்தரவு..!