சென்னை அருகே திருமுல்லைவாயில் பகுதியில் அழகு நிலையம் மற்றும் ஸ்பா சென்டர் நடத்தி வந்த பெண் ஒருவரிடம் மாதம் 20,000 ரூபாய் மாமூல் கேட்டு பணம் பெற்ற போலீஸ் அதிகாரிகள் இருவர் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் அருகே வசிக்கும் ஜெனிபர் (30) என்பவர் திருமுல்லைவாயில் சி.டி.எச். சாலையில் அழகு நிலையம் மற்றும் ஸ்பா சென்டர் நடத்தி வந்தார். கடந்த 20-ம் தேதி திருமுல்லைவாயில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். ‘ஸ்பா’ பெயரில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகக் கூறி, கடையை மூடச் சொல்லிவிட்டு காவல் நிலையத்துக்கு வரச் சொன்னதாக ஜெனிபர் கூறுகிறார்.
மறுநாள் காவல் நிலையம் சென்ற ஜெனிபரிடம், சிறப்பு எஸ்.ஐ., அமுல் (50) மற்றும் எஸ்.ஐ., பாக்கியலட்சுமி (42) ஆகியோர் “கடையை தொடர்ந்து நடத்த வேண்டுமானால் மாதம் 50,000 ரூபாய் கொடுக்க வேண்டும்” என்று கோரியுள்ளனர். இதை ஏற்க மறுத்த ஜெனிபர் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்தார்.
இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெனிபருக்கு உதவி செய்து, பணம் பேரம் பேசி மாதம் 20,000 ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தனர். ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெனிபரிடம் கொடுத்து அனுப்பினர். நேற்று பிற்பகல் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் ஜெனிபர் பணத்தை அமுலிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
பெண் போலீஸ் அதிகாரிகள் இருவர் லஞ்சம் வாங்கிய சம்பவம் போலீஸ் துறையினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பொதுமக்களிடையேவும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் போலீஸ் துறையின் நம்பகத்தன்மையை பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: ரயிலை நிறுத்தி பயணிகளிடம் வழிப்பறி! பெண் பயணியிடம் நகை பறிப்பு! ஆட்டோ டிரைவரை தட்டி தூக்கிய ரயில்வே போலீஸ்!