நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே, தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி ‘துப்பாக்கி’ செல்வம் மர்மமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்த செல்வ முருகன் என்ற செல்வத்திற்கு 41 வயது. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொலை உள்ளிட்ட 27 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி காவல்துறையின் ஏ பிளஸ் ரவுடிகள் பட்டியலிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.
நாகர்கோவிலில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தியதாக கூறப்படும் நிலையில், அதன்பின்னர் அவருக்கு ‘துப்பாக்கி செல்வம்’ என்ற பெயர் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையும் படிங்க: கொலை நகரமா? கொங்கு நகரமா?... ஒரே மாதத்தில் 9 கொலைகள்... குலை நடுங்கும் கோவை மக்கள்..!
எதிரிகளால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்ததால் தூத்துக்குடியில் தங்க வேண்டாம் என போலீசார் அவரை எச்சரித்திருந்தனர். இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே கரும்பாட்டூர் பகுதியில் மனைவியுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது தாயார் வசித்து வந்த நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே ஈத்தங்காடு பகுதிக்கு செல்வம் வந்துள்ளார். அங்கிருந்து நேற்று முன்தினம் மாலை சங்கநேரியில் உள்ள தாயாருக்குச் சொந்தமான தோட்டத்திற்கு செல்வதாகக் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஆனால், மறுநாள் காலை தோட்டத்தின் அருகில் இருந்தவர்கள் செல்வம் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்வம் தினமும் தனது நண்பர் ஒருவருடன் தோட்டத்தில் தங்குவது வழக்கம் என கூறப்படுகிறது. சம்பவம் நடந்த இரவிலும் இருவரும் மது அருந்திவிட்டு அங்கேயே தூங்கியதாக தெரிகிறது.
இதனிடையே, செல்வம் கொலை செய்யப்பட்ட பிறகு அவரது நண்பர் காணாமல் போனது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக அவரை செல்போனில் தொடர்புகொள்ள போலீசார் முயன்றபோதும், அவர் அழைப்பை ஏற்கவில்லை.
மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, இருவர் தோட்டத்துக்குள் சென்ற காட்சிகள் பதிவாகியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனால், செல்வத்துக்கும் அவரது நண்பருக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டு கொலை நடந்ததா? அல்லது வேறு நபர்கள் தோட்டத்துக்குள் நுழைந்து செல்வத்தை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனரா? என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளிகளை அடையாளம் காணவும், கொலைக்கான பின்னணியை கண்டறியவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சினிமாவை மிஞ்சிய பயங்கரம்... தொழிலாளியை கூலிப்படையுடன் சேர்ந்து கொன்ற முதலாளி... காட்டிக்கொடுத்த ‘பச்சை’....!