தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாகத் திருச்சிக்கு வருகை தரும் ச. ஜோசப் விஜய் அவர்களின் பிரம்மாண்ட நன்றி தெரிவிப்பு கூட்டத்தை முன்னிட்டு, திருச்சி மாநகரப் பகுதியில் நாளை (ஜூன் 1) காலை 10:00 மணி முதல் அதிரடியான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மாநகரக் காவல் துறை மற்றும் போக்குவரத்துத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜயின் இந்த நன்றி தெரிவிப்பு கூட்டத்திற்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, திருச்சியின் பல்வேறு இடங்களில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி வரும் மாநகரப் பேருந்துகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் திருவெறும்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும் மாநகரப் பேருந்துகள் அனைத்தும் வழக்கமான பாதையில் செல்ல அனுமதி இல்லை.
இதையும் படிங்க: மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் திட்டத்தை மத்திய அரசு தடுக்க வேண்டும்! துரை வைகோ எம்பி வலியுறுத்தல்!

இந்தப் பேருந்துகள் அனைத்தும் மாற்றுப் பாதையாக மரக்கடை வழியே இயக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மரக்கடை வழியே வரும் பேருந்துகள் மெயின் கார்டு கேட் மற்றும் காந்தி சிலை அருகே தங்களது பயணிகளை இறக்கிவிட்டு, பின்னர் அரண் சாலை வழியாகத் தங்களது இலக்கை நோக்கிச் செல்லலாம் எனப் போக்குவரத்துத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
நாளை காலை முதல் திருச்சியில் விஐபி (VIP) பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் அமலுக்கு வருவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் இந்த மாற்றுப் பாதைகளை அறிந்து கொண்டு, காவல் துறையினரின் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு திருச்சி மாநகரக் காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!