வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் (மார்ச் 12, 2026) பேசிய அதிபர் டிரம்ப், ஈரான் மீதான போர் வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதாகவும், நிலைமை அமெரிக்காவுக்கு மிகவும் சாதகமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
"எங்கள் ராணுவத்தின் வலிமைக்கு ஈடுஇணை ஏதுமில்லை. இது போன்றதொரு ராணுவ வலிமையை இதற்கு முன் எவரும் கண்டதில்லை. சரியான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்" என்று அவர் வலியுறுத்தினார்.
ஈரானை "பயங்கரவாதத்தையும் வெறுப்பையும் அடிப்படையாகக் கொண்ட நாடு" என்று குறிப்பிட்ட டிரம்ப், அந்நாடு தற்போது மிகக் கடுமையான விளைவுகளை சந்தித்து வருவதாக கூறினார். தனது முதல் பதவிக்காலத்தில் ராணுவத்தை வலுப்படுத்தியதே தற்போது இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை!! கோரமுகம்!! அதிபர் ட்ரம்பின் போருக்கு அமெரிக்க பார்லி., ஆதரவு!!
"ராணுவத்தை இவ்வளவு அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்ததில்லை. வெனிசுலாவில் நடத்திய சரியான நடவடிக்கை மற்றும் தற்போது ஈரானில் நடக்கும் செயல்பாடுகள் பிரமிக்கத்தக்கவை" என்று குறிப்பிட்டார்.

மேலும், மிசிகன் மாகாணத்தில் உள்ள யூத வழிபாட்டுத் தலம் (சினகாக்) ஒன்று மீது நடந்த தாக்குதல் குறித்தும் அவர் பேசினார். "மிசிகன் யூத சமூகத்தினருக்கு எங்கள் அன்பை தெரிவித்துக் கொள்கிறோம். இது மிகவும் துயரமான நிகழ்வு. முழு விவரங்களை அறிந்துள்ளோம். ஆணிவேர் வரை சென்று உண்மையை கண்டறிவோம்" என்று உறுதியளித்தார். இந்த தாக்குதல் ஈரான் போருடன் தொடர்புடையதா என்பது விசாரணையில் உள்ளது.
ஈரான் மீதான 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி'யில் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், ஈரானின் கடற்படை, விமானப்படை, ஏவுகணை தளங்கள் பெருமளவு அழிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தரப்பு கூறி வருகிறது.
போர் இரண்டு வாரங்களை எட்டியுள்ள நிலையில், டிரம்பின் இந்த பேச்சு அமெரிக்க ராணுவ வலிமையை மீண்டும் உலகுக்கு நிரூபிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. உலக நாடுகள் இந்தப் போரின் தாக்கத்தால் எண்ணெய் விலை உயர்வு, பொருளாதார அச்சுறுத்தல் ஆகியவற்றை எதிர்கொண்டு வருகின்றன.
இதையும் படிங்க: ஈரான் போரில் சிறப்பா செயல்படுறோம்!! வலிமையா இருக்கோம்!! தன்னைத்தானே பாராட்டிக்கொள்ளும் ட்ரம்ப்!!